ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளரை, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா கடந்த 2021-ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட நிலையில், மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, கடந்த 2023-ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் மூத்த நிர்வகியான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
ஈ.வி.கே.எஸ் இளங்கோவனும் உடல்நல பாதிப்பால் கடந்த 2024 ஆம் ஆண்டு உயிரிழந்தார். இதனால், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி, பிப்ரவரி 5-ஆம் தேதி அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
எனினும், இந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு பதிலாக தி.மு.க வேட்பாளர் தேர்தலில் போட்டியிடுவார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்தார். அந்த வகையில், தி.மு.க சார்பில் வி.சி. சந்திரகுமார் போட்டியிடுவார் என ஸ்டாலின் அறிவித்தார்.
இதனிடையே, அ.தி.மு.க, தே.மு.தி.க மற்றும் பா.ஜ.க ஆகிய கட்சிகள் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தன. அதன் காரணமாக இத்தேர்தலில் தி.மு.க - நா.த.க இடையே நேரடி போட்டி உருவானது.
இந்நிலையில், இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக சீதாலட்சுமி போட்டியிடுவார் என சீமான் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வருகின்ற 05-02-2025 அன்று, தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக என் அன்புத்தங்கை மா.கி.சீதாலட்சுமி (முதுகலை ஆய்வியல் நிறைஞர் (M.A, M.Phil.,) அவர்கள் போட்டியிடவிருக்கிறார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட அனைத்து நிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்து நிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வெற்றிக்கு முழு ஒத்துழைப்பை நல்குமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என சீமான் தெரிவித்துள்ளார்.