ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தலில், பெண் சுயேச்சை வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Erode east bypoll: Woman’s nomination rejected at midnight
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 47 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக நேற்று (ஜன 20) மதியம் சுமார் 3 மணியளவில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மாலை சுமார் 5 மணிக்கு மேல், ஆழ்வார் மற்றும் நூர் முகமது ஆகிய இரண்டு சுயேச்சை வேட்பாளர்கள், மற்றொரு பெண் வேட்பாளர் மீது புகாரளித்தனர்.
அதன்படி, பத்மாவதி என்ற பெண் சுயேச்சை வேட்பாளரின் பெயர், கர்நாடக மாநிலத்தின் வாக்காளர் பட்டியலில் இருப்பதாகவும், அதனால் அவரது வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் எனவும் அவர்கள் புகாரளித்தனர்.
குறிப்பாக, கர்நாடகாவில் உள்ள கே.ஆர். புரம் பகுதியின் வாக்காளர் பட்டியலில் அவர் பெயர் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. தேர்தல் விதிமுறைகளின் படி, தமிழகத்தில் வசிப்பவர்களே, இங்கு நடைபெறும் தேர்தலில் போட்டியிட முடியும். இது தொடர்பாக தேர்தல் அதிகாரிகள் ஆய்வு செய்த பின், தலைமை தேர்தல் அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர். இதனடிப்படையில், பத்மாவதியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.
இதனால், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 46 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.