ஈரோடு மண்டல திமுக மாநாடு நிறைவுரையில் பேசிய மு.க.ஸ்டாலின், ‘சொடுக்கு போடும் நேரத்தில் அதிமுக ஆட்சியை கலைக்க முடியும்’ என்று குறிப்பிட்டார்.
திமுக வின் ஈரோடு மண்டல மாநாட்டின் 2-ஆம் நாள் நிறைவுப் பேருரை #DMKMaanaadu2018 https://t.co/Erj5XJUssl
— M.K.Stalin (@mkstalin) 25 March 2018
ஈரோடு மண்டல தி.மு.க. மாநாடு மார்ச் 24, 25 ஆகிய இரு தினங்களிலும் பெருந்துறையில் நடந்தது. மாநாட்டின் நிறைவுரையை நேற்று இரவு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
மத்திய பா.ஜ.க. அரசு திட்டமிட்டு இந்தியை திணிக்கிறது. சமஸ்கிருதத்தை புகட்டுகிறது. ஆனால் பெரியார், அண்ணா, கலைஞரின் வாரிசுகள் நாம் இருக்கும் வரை தமிழகத்தில் அவர்கள் கால் பதிக்க முடியாது என்பதை உணர்த்தும் மாநாடாக இது அமைந்திருக்கிறது.
லட்சோப லட்சம் தொண்டர்களில் ஒருவனாக, உங்களில் ஒருவனாகவே நான் இருப்பேன். உங்களில் ஒருவன், உங்களால் ஒருவன், உங்களுக்காக ஒருவன். இன்று தி.மு.க.வை அழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு ஒரு கும்பல் சூழ்ச்சி, சூது செய்கிறது.
மிருகபலத்துடன் ஆட்சியில் இருக்கும் பா.ஜனதா திராவிட இயக்கங்களை அழிக்க சதி செய்கிறது. ஊடகங்களில் உட்கார்ந்து கொண்டு ஏளனம் செய்கிறார்கள். ஏகடியம் செய்கிறார்கள். தி.மு.க. என்ன செய்தது என்று கேட்கிறார்கள். இந்த தைரியம், ஆணவம், துணிச்சல் அவர்களுக்கு எப்படி வந்தது?.
புதிய ஐம்பெரும்முழக்கங்களை உடன்பிறப்புகளுக்கு ஈரோடு மாநாட்டில் வழங்கினேன்
1.கலைஞரின் கட்டளையைக் கண்போல் காப்போம்
2.தமிழரை வளர்த்து, தமிழைப் போற்றுவோம்
3.அதிகாரக் குவியலை அடித்து நொறுக்குவோம்
4.மதவெறியை மாய்த்து மனிதநேயம் காப்போம்
5.வளமான தமிழகத்தை வளர்த்து எடுப்போம் #DMKMaanaadu pic.twitter.com/C89H5fDgWZ— M.K.Stalin (@mkstalin) 25 March 2018
சில மாநிலங்களில் பண பலம், பிரித்தாளும் சூழ்ச்சி, அதிகார பலத்தால் தங்கள் ஆட்சியை கொண்டு வர பார்க்கிறார்கள். இங்கும் குதிரைபேர ஆட்சி அவர்கள் கூப்பிட்ட குரலுக்கு கைகட்டி வாய்ப்பொத்தி சேவை செய்கிறது. மனித உரிமை பறிப்பு, இந்தி திணிப்பு, சமஸ்கிருத போதிப்பு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது என்று பல்வேறு நிலைகள் உள்ளன. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி 6 வார காலத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்கிறார்கள்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சுப்ரீம் கோர்ட்டு விதித்த கெடு வருகிற 29-ந் தேதியுடன் முடிகிறது. அதற்குள் வாரியம் அமைக்கப்படவில்லை என்றால் விவசாயிகளை திரட்டி சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவோம் என்று எச்சரிக்கையாக மத்திய-மாநில அரசுகளுக்கு தெரிவிக்கிறேன். டெல்லி சென்றும் போராட்டம் நடத்துவோம்.
தமிழக அரசியலில் எப்போதும் வெற்றிடம் இருக்காது. அறிவியல்படி வெற்றிடம் உடனடியாக நிரப்பப்பட்டு விடும். எனவே வெற்றிடம் எதுவும் இல்லை. தி.மு.க.வில் எப்போதும் வெற்றிடம் இருக்காது. ஊழல் நிறைந்த இந்த ஆட்சி இன்னும் ஒருவாரத்தில் இருக்காது. இந்த ஆட்சியை கலைத்து நாம் ஆட்சியை பிடிக்கப்போவது இல்லை. சொடுக்கு போடும் நேரத்தில் ஆட்சியை கலைக்க முடியும். ரூ.3 கோடி தருகிறேன் என்றால் வரப்போகிறார்கள். ஆனால் பணம் கொடுத்து ஆட்சியை பிடித்தால் மக்களைப்பற்றி சிந்திக்க முடியுமா? எனவே நாம் ஆட்சியை கலைக்க மாட்டோம்.
எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு வரும். தீர்ப்பு வந்தால் ஆட்சி கலையும். 6 மாதம் கவர்னர் ஆட்சி. அடுத்து பொதுத்தேர்தல். யாருடைய தயவும் இன்றி முழு பலத்துடன் ஆட்சியில் அமர்வோம். அதற்கு பின்னர் 30 ஆண்டுகள் யாரும் நம்மை அசைக்க முடியாது.
இவ்வாறு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
மாநாட்டு நிதியாக ரூ.5 கோடியே 10 லட்சத்தை மாநாட்டு வரவேற்புக்குழு தலைவர் சு.முத்துசாமி மற்றும் நிர்வாகிகள் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்கள். நிகழ்ச்சி முடிந்ததும் மாநிலம் முழுவதும் இருந்து வந்திருந்த தொண்டர்கள் வாகனங்களில் அவரவர் ஊர்களுக்கு கிளம்பிச் சென்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.