ஏர்வாடி பள்ளி ஆண்டு விழாவில் அதிக வெளிச்சம் உள்ள மின் விளக்கு காரணமாக 70 மாணவ, மாணவிகளுக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டது. அவர்கள் சிகிச்சை பெறுகிறார்கள்.
ஏர்வாடி, திருநெல்வேலி மாவட்டத்தில் நாங்குனேரிக்கும் களக்காடுக்கும் இடைப்பட்ட பேரூராட்சி. இங்கு சேனையர் தெருவில் எஸ்.வி. இந்து துவக்க பள்ளி செயல்பட்டு வருகிறது. இது அரசு உதவி பெறும் பள்ளி ஆகும்.
ஏர்வாடி, இந்து துவக்கப் பள்ளியில் மார்ச் 16-ம் தேதி பிறபகலில் ஆண்டு விழா நடைபெற்றது. அப்போது அதிக வெளிச்சம் தரும் மின்விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன. இந்த விளக்குகள் துவக்கப்பள்ளி மாணவ, மாணவிகளான சிறுவர் சிறுமிகளுக்கு ஒத்துக்கொள்ள வில்லை. பலருக்கு கண் எரிச்சல் ஏற்பட்டது.
கண் பாதிப்பு குறித்து ஆரம்பத்தில் யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. கலை நிகழ்ச்சிகள் முடிந்தபிறகே சிலருக்கு கண்களை திறக்க முடியாத அளவுக்கு நிலைமை இருந்தது. இது குறித்து மாணவ-மாணவிகள் ஆசிரியர்களிடம் கூறினர். இதையடுத்து உடனடியாக அந்த மின்விளக்கு அணைக்கப்பட்டது.
ஏர்வாடியில் பாதிக்கப்பட்ட சுமார் 70 மாணவ-மாணவிகள் மற்றும் 30 பெற்றோர்கள், 5 ஆசிரியர்கள் உள்ளிட்டவர்களுக்கு அதிகளவு கண் எரிச்சல் ஏற்பட்டது. மேலும் சிலருக்கு கண்ணில் வீக்கம் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் இன்று காலை நெல்லை சந்திப்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருநெல்வேலி கண் மருத்துவமனையில் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள், உறவினர்கள் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கல்வித் துறை அதிகாரிகள் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.