/indian-express-tamil/media/media_files/2025/06/09/cuW743POd7uWj6TlyL8h.jpg)
தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த ஓய்வுபெற்ற ஐ.ஆர்.எஸ் அதிகாரி அருண்ராஜுக்கு, கட்சியின் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் பதவியை விஜய் வழங்கியுள்ளார்.
ஐ.ஆர்.எஸ் அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்ற அருண்ராஜ், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். முன்னதாக, மருத்துவராக பணியாற்றி வந்த அருண்ராஜ், அதன் பின்னர் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று ஐ.ஆர்.எஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
ஐ.ஆர்.எஸ் அதிகாரியாக பணியாற்றிய அருண்ராஜ், தனிப்பட்ட முறையில் ஒரு வலைப்பக்கம் தொடங்கி அதில் சமூகம் சார்ந்த கருத்துகளை பதிவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், தாம் வகித்து வந்த பதவியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற அருண்ராஜ், தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார்.
அவருக்கு மாநில கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. த.வெ.க தலைவர் விஜய், தனது கட்சி விவகாரம் தொடர்பாக விவாதிக்கக் கூடிய ஒரு சில நபர்களில் முக்கியமானவராக அருண்ராஜ் திகழ்ந்தார் என்று அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. கடந்த 2020-ஆம் ஆண்டு விஜய் தொடர்பான இடங்களில் ஐ.டி சோதனை நடத்தப்பட்ட போது, அதில் அதிகாரியாக அருண்ராஜ் இருந்ததாக தெரிகிறது.
அதன் பின்னர், இவர்கள் இருவருக்கும் இடையே நட்பு உருவானதாக நெருங்கிய வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகின்றன. அருண்ராஜை தவிர வேறு சிலரும் இன்றைய தினம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளனர். குறிப்பாக, முன்னாள் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ராஜலட்சுமியும் த.வெ.க-வில் இணைந்துள்ளார்.
இன்று கட்சியில் இணைந்தவர்களின் விவரத்தை, தனது எக்ஸ் தள பக்கத்தில் விஜய் பதிவிட்டுள்ளார். அதில், "தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு மற்றும் செயல்திட்டங்களை மேம்படுத்தும் வகையில் திரு. டாக்டர் K.G. அருண்ராஜ் Ex IRS. அவர்கள், கொள்கை பரப்புப் பொதுச் செயலாளர் (Propaganda & Policy General Secretary) பொறுப்பில் நியமிக்கப்படுகிறார்.
இவர், எனது உத்தரவு மற்றும் ஆலோசனைக்கு இணங்க, கழகப் பொதுச் செயலாளர் திரு. என்.ஆனந்த் அவர்களது வழிகாட்டுதலின்படி, கழகக் கொள்கைகள் மற்றும் கொள்கை சார்ந்த செயல்திட்டப் பணிகளை மேற்கொள்வார். கழகத் தோழர்களும் அனைத்து நிலை நிர்வாகிகளும் புதிய பொறுப்பாளருக்கு முழு ஒத்துழைப்பை நல்கி, வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான கட்டமைப்பு மற்றும் தேர்தல் முன்னெடுப்புகளை முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், தமிழக வெற்றிக் கழகத்தில் அண்மையில் புதிதாக இணைந்தவர்கள் பற்றிய விவரம்:-
1. திருமதி R. ராஜலட்சுமி B.Com., B.L., M.B.A. அவர்கள் முன்னாள் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்
2. திரு. S. டேவிட் செல்வின் B.Com. அவர்கள் முன்னாள் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்
3. திரு. டாக்டர் A. ஸ்ரீதரன் M.B.B.S., D.A., Ph.D., SRF. அவர்கள் திராவிட முற்போக்கு மக்கள் கட்சி நிறுவனர், முன்னாள் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்
4. திரு. டாக்டர் N. மரிய வில்சன் B.Tech., M.B.A., P.hd, அவர்கள் நிர்வாக அறங்காவலர், ஜேப்பியார் ரெமிபாய் கல்வி அறக்கட்டளை, தலைவர், ஜேப்பியார் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி
5. சி. சுபாஷ் B.A.L., LLB., LLM (IND)., LLM (UK).. PGDPM & IR., JAIIB. முன்னாள் நீதிபதி, தமிழ்நாடு மாநில ஜூடிசியல் சர்வீஸ், சென்னை
— TVK Vijay (@TVKVijayHQ) June 9, 2025
கழகத்தில் புதிதாக இணைந்த அனைவருக்கும் எனது வாழ்த்துகள். இவர்களுக்கும், கழகத் தோழர்களும், அனைத்து நிலை நிர்வாகிகளும் முழு ஒத்துழைப்பை நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கட்சியில் புதிதாக பதவி வழங்கப்பட்டுள்ள அருண்ராஜ் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டார். அப்போது, "தேர்தல் அரசியலை கடந்து சமூக மாற்றத்திற்காக விஜய் முன்னெடுத்துள்ள இந்த கட்சியில் இணைந்ததற்காக மகிழ்ச்சி அடைகிறேன்.
தமிழ்நாட்டிற்கு தேவையான அரசியலை த.வெ.க முன்னெடுத்துள்ளது. மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதற்காகவே பொதுவாழ்க்கையில் ஈடுபட்டுள்ளேன்" என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.