/indian-express-tamil/media/media_files/2025/02/21/KZoueTgzfflKXIz9PJQX.jpg)
இந்தியை திணிக்கும் விதமாக செயல்பட்டு மீண்டும் ஒரு மொழிப்போர் உருவாக வழிவகுக்காதீர்கள் என அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மத்திய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டமான சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு ரூ. 2,152 கோடி கல்வி நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த நிதியை மத்திய அரசு விடுவிக்கவில்லை. இந்நிலையில், புதிய கல்விக் கொள்கையை ஏற்காவிட்டால் தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி கிடையாது என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருந்தார்.
குறிப்பாக, "மும்மொழிக் கொள்கையை பிற மாநிலங்கள் ஏற்கும்போது தமிழ்நாடு மட்டும் ஏற்க மறுப்பது ஏன்? புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்றுக் கொண்டால்தான் கல்வி நிதி விடுவிக்கப்படும். புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்காத பட்சத்தில் ரூ. 2 ஆயிரம் கோடியை விடுவிக்க சட்டத்தில் இடமில்லை. அரசியல் காரணங்களுக்காகவே தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு எதிர்க்கிறது" என அவர் தெரிவித்தார்.
இதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் இடையே கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, மும்மொழிக் கொள்கை, தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி ஒதுக்காதது உள்ளிட்டவற்றை கண்டித்து சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் சார்பில் பிப்ரவரி 18-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் "அ.தி.மு.க-விற்கும் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். இந்த பிரச்சனையை கொண்டு அரசியல் செய்வதையும், அவதூறு பேசுவதையும் கைவிடுங்கள். கட்சி பெயரில் திராவிடத்தையும், அண்ணாவையும் வைத்துக் கொண்டு ஒதுங்கி நிற்காதீர்கள்; எங்களுடன் இணைந்து குரல் கொடுங்கள்" என அறிவுறுத்தினார்.
இந்நிலையில், மும்மொழிக் கொள்கை தொடர்பாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "உலகம் போற்றும் திருக்குறளை எழுதிய திருவள்ளுவர், இந்தியையா கற்றுக் கொண்டார்? சங்க இலக்கியங்களையும், ஐம்பெருங்காப்பியங்களையும் எழுதியவர்கள் இந்தியை கற்றுக்கொண்டா எழுதினார்கள்?. உலகில் முதலில் தோன்றிய மொழியான தமிழை அழிக்கும் நோக்கில், இந்தியை புகுத்த நினைக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்களும் - தமிழ் மண்ணும் மும்மொழிக் கொள்கையை எந்நாளும் ஏற்க போவதில்லை. பா.ஜ.க அரசு, நிதியை விடுவித்து மும்மொழி கொள்கையை கைவிட வேண்டும். மீண்டும் ஒரு மொழிப்போர் உருவாக வழிவகுக்காதீர்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.