New Update
/indian-express-tamil/media/media_files/2025/02/14/3LH84ruDcKlECgSJ3ehC.jpg)
அ.தி.மு.க பொதுக்கூட்டத்தின் போது எடப்பாடி பழனிசாமியின் பெயரை பயன்படுத்தாதது ஏன் என்பதற்கான விளக்கத்தை, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அத்திக்கடவு - அவிநாசி திட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பிப்ரவரி 9-ஆம் தேதி கோவை அன்னூர் கஞ்சப்பள்ளி பிரிவில் விவசாய சங்கங்கள் சார்பில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்நிகழ்வில், அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஆனால், முன்னாள் அமைச்சரான செங்கோட்டையைன் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை. இத்திட்டத்திற்கு அடித்தளமாக இருந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரது படங்கள் மேடையில் இடம்பெறாததால் விழாவில் தான் கலந்து கொள்ளவில்லை என செங்கோட்டையன் தனது அதிருப்தியை தெரிவித்திருந்தார். இச்சம்பவம் அரசியல் களத்தில் பேசுபொருளானது.
ஆனால், கட்சி சார்பாக நடத்தப்பட்ட விழாவாக இல்லாததால், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரது படங்கள் இடம்பெறவில்லை எனவும் விளக்கம் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டம், கோபியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். பிறந்தநாள் நிகழ்ச்சியில் செங்கோட்டையன் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசும் போது, "எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் படங்கள் இல்லாததால் தான் விவசாயிகள் பாராட்டு விழாவில் நான் கலந்துகொள்ளவில்லை. முன்னாள் முதலமைச்சர்கள் பெயர் இல்லை என்று தான் சொன்னேன். அ.தி.மு.க ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான். என்னை சோதிக்காதீர்கள்; அதுதான் எனது வேண்டுகோள்" எனக் கூறினார்.
இவை ஒருபுறமிருக்க, சமீபத்தில் நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்கூட்டத்தின் போது கட்சியின் பொதுச் செயலாளராக விளங்கும் எடப்பாடி பழனிசாமியின் பெயரை ஒரு முறை கூட செங்கோட்டையன் கூறவில்லை என ஒரு தரப்பினர் விமர்சனம் செய்தனர். இந்த குற்றச்சாட்டுக்கு செங்கோட்டையன் இன்று விளக்கம் அளித்துள்ளார்.
அதன்படி, இன்று ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது, "அந்தியூரில் தொடர்ந்து வெற்றி வாகை சூடிய கட்சி அ.தி.மு.க. ஆனால், இந்த இயக்கத்திற்கு சிலர் செய்த துரோகத்தினால் தான் அங்கு தோல்வியைச் சந்தித்தோம் என்று நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கூறினேன்.
நான் பங்கேற்ற கூட்டங்களில் எடப்பாடி பழனிசாமி என்ற பெயரை பயன்படுத்தவில்லை எனக் கூறுகிறார்கள். ஆனால், கழகப் பொதுச்செயலாளர், எதிர்க்கட்சி தலைவர் என அழுத்தமாக சொல்லி இருக்கிறேன்" எனத் தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.