/indian-express-tamil/media/media_files/Xgt2QsRZ3h7jEO2j2N3j.jpg)
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த தென்னலக்குடி பகுதியில் அரசு டாஸ்மாக் மதுபான கடை உள்ளது. இங்கு காரைமேடு பள்ளிக்கூடத் தெருவைச் சேர்ந்த மணிகண்டன் (31) மற்றும் நாங்கூர் மேலத் தெருவைச் சேர்ந்த சார்லஸ் (27) ஆகிய இருவர் கடந்த மே 6-ம் தேதி பிற்பகல் டாஸ்மாக் கடையில் டின் பீர் வாங்கி குடித்துள்ளனர்.
இந்த நிலையில், அவர்கள் டின் பீர் அருந்திய சில மணி நேரத்தில் இருவருக்கும் வாந்தி ஏற்பட்டு மயக்கம் அடைந்துள்ளனர். இதை கண்டு அதிர்ச்சியடைந்த அருகில் இருந்தவர்கள் அவர்கள் இருவரையும் மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் கடந்த ஜனவரி மாதத்துடன் காலாவதியான பீர் குடித்தது தெரியவந்தது. காலாவதியான பீர் குடித்ததால் அவர்களுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாக கூறினர். எனினும் இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்த சம்பவத்தையடுத்து அலட்சியமாக செயல்பட்ட தென்னலக்குடி டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளர் வடிவேல், விற்பனையாளர் சங்கர் உட்பட 3 பேரை டாஸ்மாக் நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.