/indian-express-tamil/media/media_files/2025/05/25/25pBHXDqhZyJQFmLtwig.jpg)
காலையிலேயே அதிர்ச்சி... சிவகாசியில் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து!
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ஏராளமான பட்டாசு தயாரிப்பு ஆலை அமைந்துள்ளன. இங்கு பல்லாயிரக்கணக்கானோர் இந்த ஆலைகளில் பணியாற்றி வருகின்றனர். இத்தகைய சூழலில்தான் அங்குள்ள பட்டாசு ஆலைகளில் அடிக்கடி வெடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்வது தொடர்கதையாகி வருகிறது. சிவகாசி பேருந்து நிலையம் அருகே உள்ள அம்மாப்பட்டியில் தங்கபாண்டி என்பவருக்குச் சொந்தமான தனியார் பட்டாசு தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்தப் பட்டாசு ஆலையில் இன்று அதிகாலை பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதனால், பட்டாசு ஆலையின் ஒரு அறை முற்றிலுமாக இடிந்து தரைமட்டமானது. இதனால், அந்தப்பகுதி முழுவதுமே கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் தொழிலாளர்கள் யாரும் பணிக்கு வராத நிலையில் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். கலவை செய்த ரசாயனம் மூலப் பொருட்களை மீதம் வைத்துவிட்டு சென்ற நிலையில் அந்த ரசாயன மூலப்பொருள் நீர்த்து தானாகவே வெடித்துள்ளதே விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த வெடிவிபத்தால் ஏற்பட்ட அதிர்வு 10 கி. மீ. சுற்றளவில் உள்ள சுற்றுவட்டாரப் பகுதிகளில் உணரப்பட்டதால், அந்தப் பகுதியில் உள்ள மக்கள் மிகவும் அச்சமடைந்து உள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.