/tamil-ie/media/media_files/uploads/2022/05/jaishankar-cm-mk-stalin.jpg)
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி சூழ்நிலைமையைக் கருத்தில் கொண்டு, அங்கே உள்ள தமிழர்களுக்கு உதவுவதற்காக விரைவில் பொருட்களை அனுப்புவதற்கான வசதியை செய்து தருமாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசிடம் கேட்டிருந்த நிலையில், மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பதில் கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கைத் தமிழர்களுக்குத் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து உணவு தானியங்கள், காய்கறிகள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அனுப்புவதற்கு உரிய வசதியை செய்து தருமாறும், யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை முன்கூட்டியே விடுதலை செய்வதற்குத் தேவையான சட்டப்பூர்வ உதவிகளை மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
அந்த கடிதத்தில், இலங்கையில் தற்போது நிலவும் மோசமான பொருளாதார நெருக்கடி சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அங்கே உள்ள தமிழர்களுக்கு விரைவாக பொருட்களை அனுப்புவதற்கான வசதியை செய்து தருமாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.
இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலினுக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதில் கடிதம் அனுப்பி உள்ளார். அதில், இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்க அனுமதி அளிக்கப்படுவதாகவும், பொருட்களை மத்திய அரசு மூலம் அனுப்பலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு விரும்பினால் இலங்கையில் பொருட்களை விநியோகம் செய்யும் பணிகளை ஒருங்கிணைக்க தலைமைச் செயலாளரை அனுப்பி வைக்கலாம் என்றும் ஜெய்சங்கர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழக அரசு இலங்கைத் தமிழர்களுக்கு உதவி செய்ய வேண்டுமானால் மத்திய அரசு வழியாக நிவாரணப் பொருட்களை அனுப்பலாம் என்று கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.