நிலாவில் தெரிந்ததா முகம்? சென்னையில் நேற்று இரவு வானில் தோன்றிய நிலவில் இரண்டு கண்கள், மூக்கு, உதடு மற்றும் காது கொண்ட முகம் ஒன்று தெரிந்ததாக தகவல் பரவி, பரபரப்பை ஏற்படுத்தியது.
நிலாவில் தெரிந்த முகம் சாய் பாபா - இயேசு என்று விவாதத்தில் இறங்கிய பக்தர்கள்!
சென்னையில் நேற்று இரவு நிலவில் திடீரென ஒரு முகம் தோன்றியதாகவும், சற்று சாய்ந்து பார்ப்பதுபோல் அம்முகம் இருப்பதாகவும் பரபரப்பு கிளம்பியது. அதுவும் எல்லோரும் எளிதாக பார்க்கக்கூடிய வகையில் இரண்டு கண்கள், மூக்கு, காது மற்றும் உதடு மிகவும் தெளிவாக தென்பட்டதாக வாட்ஸ் அப்களிலும் இதர சமூக வலைதளங்களிலும் தகவல்கள் பரவின.
இதைக் காண இரவு முழுவதும் பொதுமக்கள் வீதியிலும், வீட்டு மாடியிலும் குவிந்தனர். மேலும் அந்த முகத்தை பார்த்ததாக சிலரும், ‘அப்படி எதுவும் இல்லையே?’ என வேறு சிலரும் குறிப்பிட்டனர். இதற்கிடையே நிலவில் தோன்றியது சாய் பாபா தான் என்று சிலரும், இல்லை இல்லை அது இயேசு என்று சிலரும் விவாதத்தில் இறங்கினர்.
ஆனால் நிலவில் அப்படி முக உருவ அமைப்பு தோன்றியதாக வானிலை நிபுணர்கள் யாரும் உறுதிப்படுத்தவில்லை. முகம் இருப்பது போல வெளியான நிலா படங்கள் அனைத்தும் போட்டோஷாப் செய்யப்பட்டவை என்றும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.