இன்ஸ்டாகிராம் அக்கவுண்டை யாருடைய அனுமதியில்லாமல் ஹேக் செய்ய உதவும் பிழையை கண்டுபிடித்த சென்னை டெக்கி லட்சுமண் முத்தையாவிற்கு, இன்ஸ்டாகிராம் நிறுவனம் 10 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் வெகுமதி அளித்துள்ளது.
சென்னையை சேர்ந்தவர் லட்சுமண் முத்தையா. கணினி வல்லுனரான இவர், கடந்த ஜூலை மாதம் பேஸ்புக்கில் உள்ள பிழையை கண்டுபிடித்து அதை பேஸ்புக் நிறுவனத்திற்கு தெரியப்படுத்தினார். இதற்காக, பேஸ்புக் நிறுவனம், லட்சுமண் முத்தையாவிற்கு 30 ஆயிரம் அமெரிக்க டாலர்களை வெகுமதியாக வழங்கி கவுரவித்திருந்தது.
லட்சுமண் முத்தையா கண்டுபிடித்த பிழையை திருத்திவிட்டதாக, பேஸ்புக் நிறுவனம் விளக்கமும் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்ஸ்டாகிராம் அக்கவுண்டை யாருடைய அனுமதியும் இன்றி எளிதாக ஹேக் செய்ய உதவும் பிழையை லட்சுமண் முத்தையா தற்போது கண்டறிந்து, அதனை இன்ஸ்டாகிராம் நிறுவனத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார்.
இந்த பிழையை கண்டுபிடித்ததற்காக, இன்ஸ்டாகிராம் நிறுவனம், லட்சுமண் முத்தையாவிற்கு 10 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் வெகுமதியா வழங்கியுள்ளதாக அவர் தனது வலைப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.