போலி இ-பாஸ் வழங்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இளநிலை வருவாய் ஆய்வாளர் உதயக்குமார், டிரைவர் வினோத்குமார் ஆகியோருக்கு ஜாமீன் வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுத்து விட்டது.
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நோக்கத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதில் இருந்து தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்கள் செல்வதற்கும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கும் இ-பாஸ் வழங்கும் முறையை தமிழக அரசு கடைபிடித்து வருகிறது.
திருமணம், இறப்பு போன்ற நிகழ்வுகளுக்கும், அவசர மருத்துவ சிகிச்சைகளுக்கும் மட்டுமே இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் ஒரு கும்பல் போலியாக இ - பாஸ் தயாரித்து வழங்குவதாக கிடைத்த தகவலின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி சென்னை பேசின் பிரிட்ஜ் வருவாய் ஆய்வாளர் குமரன், சென்னை கலெக்டர் அலுவலகத்தில் இளநிலை வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்த உதயக்குமார் மற்றும் கோபி, மனோஜ்குமார், டிரைவர் வினோத்குமார் ஆகியோரை கைது செய்தனர்.
இவர்களில் குமரன், மனோஜ்குமார் ஆகியோரின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், ஏற்னவே தள்ளுபடி செய்துள்ளது.
இந்த நிலையில் இளநிலை வருவாய் ஆய்வாளர் உதயக்குமார், டிரைவர் வினோத்குமார் ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதி ஆர்.செல்வக்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, போலி இ – பாஸ் வழங்கியதில் மனுதாரர்களுக்கு எந்த தொடர்பும் கிடையாது என, மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
ஆனால், டிரைவர் வினோத்குமார் மற்றும் இளநிலை வருவாய் ஆய்வாளர் உதயக்குமார் ஆகியோர், டிராவல் ஏஜென்சியைச் சேர்ந்தவர்களுடன் கூட்டு சேர்ந்து அரசு ஆவணங்களை பயன்படுத்தி ரகசியமாக இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர்... இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது… அதனால், மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என, அரசுத்தரப்பில் வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி செல்வகுமார், மனுதாரர்கள் இருவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.