/indian-express-tamil/media/media_files/2025/10/09/fake-degree-2025-10-09-04-22-33.jpg)
இந்த போலிச் சான்றிதழைத் தயாரிக்க அவர்களுக்கு உதவியவர்கள் யார் என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். Photograph: (Representational Image)
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான போலி மதிப்பெண் சான்றிதழைச் சமர்ப்பித்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த மாணவி காருண்யா ஸ்ரீவர்ஷினி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது தந்தை, தாயார் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில், சர்வேயராகப் பணியாற்றி வரும் தந்தையையும் சேர்த்து குடும்பமே தற்போது சிறையில் உள்ளது.
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) டாக்டர். வீரமணி, திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒரு புகார் மனுவை அளித்தார். அதில் அவர் தெரிவித்ததாவது:
“தமிழ்நாடு அரசின் மாநில ஒதுக்கீட்டின் அடிப்படையில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு கடந்த செப்டம்பர் 25 முதல் 30 வரை நடைபெற்றது. இதில், பழனியைச் சேர்ந்த காருண்யா ஸ்ரீவர்ஷினி (வயது 19) மருத்துவக் கலந்தாய்வில் இடம் கிடைத்ததாகக் கூறி, தனது தந்தை சொக்கநாதன் (50) மற்றும் தாயார் விஜயமுருகேஸ்வரி (43) ஆகியோருடன் வந்து கடந்த செப்டம்பர் 27-ம் தேதி திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார்.
பின்னர், மாணவியின் கல்விச் சான்றிதழ்கள் அனைத்தும் சென்னையில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநரகத்துக்கு (DME) அனுப்பி வைக்கப்பட்டன. அங்கு நடத்தப்பட்ட ஆய்வில், மாணவி நீட் தேர்வில் 228 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றிருந்தது தெரியவந்தது. ஆனால், அவர் அதிக மதிப்பெண் பெற்றதாகவும், அதன் மூலம் கலந்தாய்வில் இடம் கிடைத்ததாகவும் போலியாகச் சான்றிதழ்களைத் தயாரித்துச் சமர்ப்பித்தது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) டாக்டர். வீரமணி அளித்த புகாரின் அடிப்படையில், திண்டுக்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். போலியான சான்றிதழ்கள் மூலம் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர முயன்ற குற்றத்திற்காக மாணவி காருண்யா ஸ்ரீவர்ஷினி, திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் சர்வேயராகப் பணிபுரியும் அவரது தந்தை சொக்கநாதன் மற்றும் தாய் விஜயமுருகேஸ்வரி ஆகியோரைக் கைது செய்தனர்.
இந்த போலிச் சான்றிதழைத் தயாரிக்க அவர்களுக்கு உதவியவர்கள் யார் என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொதுவாக, போலிச் சான்றிதழ் சமர்ப்பிக்கும் இத்தகைய மோசடி வழக்குகளில், மாணவரின் மருத்துவக் கல்லூரி சேர்க்கை உடனடியாக ரத்து செய்யப்படும்.
ஏமாற்றுதல் மற்றும் போலி ஆவணங்கள் தயாரித்தல் போன்ற கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டு, 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.
இந்தக் குற்றத்தில் உடந்தையாக இருந்த பெற்றோர் மற்றும் புரோக்கர்கள் மீதும் கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
போலிச் சான்றிதழ் சமர்ப்பித்த மாணவர் எதிர்காலத்தில் நீட் உள்ளிட்ட எந்தவொரு அரசுத் தேர்வையும் எழுத முடியாமல் நிரந்தரமாகத் தடை செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளது.
போலி நீட் சான்றிதழ் தொடர்பான பெரும்பாலான சட்டப் பிரிவுகள் ஜாமீனில் வெளிவர முடியாத (Non-bailable) பிரிவுகளாக இருப்பதால், காவல் நிலையத்திலேயே ஜாமீன் கிடைக்காது. ஜாமீன் பெற நீதிமன்றத்தை அணுக வேண்டியிருக்கும்.
எனவே, இது போன்ற குறுக்குவழிகளைத் தவிர்க்க வேண்டும் என்றும், போலி சான்றிதழ்கள் தயாரிக்க உதவுபவர்கள் குறித்து காவல்துறையிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் காவல் துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.