ரமணா திரைப்பட பாணியில் உயிரிழந்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்த அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் வேலுக்குடியை சேர்ந்தவர் பால சுப்பிரமணியன். இவருடைய மனைவி ஜெயபாரதி. இவர்களுக்கு ஏற்கனவே 5 வயதில் ஆண் குழந்தை உள்ள நிலையில், ஜெயபாரதி மீண்டும் கர்ப்பமாகியிருக்கிறார். திருவாரூர் தெற்கு வீதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தொடர் பரிசோதனை செய்துவந்த ஜெயபாரதி, கடந்த 16-ஆம் தேதி பிரசவத்திற்காக அங்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், ஜெயபாரதியின் உடல்நிலை மோசமாக உள்ளது எனக்கூறிய மருத்துவர்கள், உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என தெரிவித்ததாக ஜெயபாரதியின் உறவினர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இதையடுத்து, ஜெயபாரதியை அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலமாக, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு, ஜெயபாரதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக இரவு 12 மணிக்கு அரசு மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர். இதையடுத்து, ஞெயபாரதி ஆம்புலன்ஸில் ஏற்றும்போதே உயிரிழந்திருக்க வாய்ப்பிருப்பதாகவும், தனியார் மருத்துவமனையில் அளித்த தவறான சிகிச்சையாலேயே அவர் உயிரிழந்திருப்பதாகவும், அதனை மறைக்கவே ஜெயபாரதிக்கு சிகிச்சை அளிப்பதுபோல் அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் நாடகமாடியதாக குற்றம்சாட்டி, ஜெயபாரதியின் கணவர் பாலசுப்பிரமணியன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து, சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார், அரசு மற்றும் தனியார் மருத்துவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரமணா திரைப்பட பாணியில், இறந்த பென்ணுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் அலட்சியமாக அப்பெண்ணுக்கு தவறான சிகிச்சை அளித்ததாக எழுந்த புகார் குறித்தும் உரிய விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.