அரசு பேருந்தில் டிக்கெட் உறுதி செய்யப்பட்டும், சீட் இல்லாமல் நின்று கொண்டு பயணம் செய்த வழக்கில் 9 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு வெளியாகியிருக்கிறது.
சென்னை, போரூரில் உள்ள சபரி நகரைச் சேர்ந்தவர் அப்துல் அஜீஸ். இவர் கடந்த 2010-ல் தனது குடும்பத்தினர் 8 பேருடன் வேதாரண்யம் செல்வதற்கு தமிழ்நாடு போக்குவரத்து கழக பேருந்தில் முன்பதிவு செய்திருந்தார்.
பயண நாளன்று பேருந்தில் ஏறிய அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் மொத்தம் 40 பேர் மட்டுமே அந்த பேருந்தில் பயணிக்க முடியும். ஆனால், 36 முதல் 44 வரை (41, 42, 43, 44 உட்பட) இல்லாத சீட்டுகளும் புக்காகியிருந்தன. இது குறித்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் கேட்டதற்கு, அவர்கள் கடுமையான வார்த்தைகளில் அப்துல் மற்றும் அவரது குடும்பத்தினரை திட்டினர்.
சென்னையிலிருந்து வேதாரண்யம் வரை 350 கி.மீ நின்றுக் கொண்டே பயணம் செய்யும்படி அவர்கள் வற்புறுத்தப்பட்டனர். இதனால் கால்வலி ஏற்பட்டு, உடல்நலக் குறைவுக்கு ஆளாகினர் அந்த 4 பேரும். தவிர, பெரும் மன உளைச்சலும் அவர்களை தொற்றிக் கொண்டது.
இந்நிலையில் நின்றுக் கொண்டு பயணம் செய்த 4 பேரின் பேருந்துக் கட்டணம் ரூ.405 மற்றும், நஷ்ட ஈடு வழங்கக்கோரி சென்னை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் அப்துல்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், போக்குவரத்து கழகத்திற்கு கண்டனம் தெரிவித்ததோடு, அவர்களின் டிக்கெட் கட்டணம் ரூ.405, நிற்க வைத்து அழைத்துச் சென்றதற்கான மருத்துவ செலவு ரூ.789, மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக ரூ.30000/- மற்றும் வழக்கு செலவுக்கு ரூ.5000 என மொத்தம் 36,203/- ரூபாயை நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட்டு தீர்ப்பளித்திருக்கிறார்கள்.