Tamilnadu weather today : தமிழகத்தில் தாமதமாக தொடங்கிய வடகிழக்கு பருவமழை கடந்த ஜனவரி மாதம் 2-ம் தேதி நிறைவடைந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 24 சதவீதம் குறைவாகவே பெய்தது. வடகிழக்கு பருவ மழை காலத்தில் 4 புயல்கள் உருவாகின. அவற்றில் ஈரப்பதம் குறைவாக இருந்ததால் மழை இல்லை. கஜா புயல் மட்டுமே மழைக்கு சாதகமாக இருந்தது. கஜா தவிர்த்து, மற்ற 3 புயல்கள் திசைமாறி நகர்ந்து சென்று விட்டதால் மழை இல்லை.
தமிழகத்தில் பருவமழை போதுமான அளவு பெய்யாத நிலையில், ஏப்ரல், மே மாதங்கள் கோடை காலமாக பொதுவாக கருதப்பட்டு வந்தாலும், கடந்த பிப்ரவரி மாதம் முதலே வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே உள்ளது. ஏற்கெனவே மழை இல்லாததால் நீர்நிலைகள் வற்றி, பல்வேறு பகுதிகளில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. 'ஃபனி' புயல் காரணமாக தமிழகத்துக்கு மழை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதுவும் திசைமாறி ஓடிசாவை நோக்கி சென்று சென்று நம்மை ஏமாற்றி விட்டது.
ஒடிசாவில் பேய் மழையை அளித்துக் கொண்டிருக்கும் ஃபனி புயல் தமிழகத்தை இப்படி ஏமாற்றியது சென்னை மக்களை கடுமையான சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதில் நாளை முதல் அக்னி நட்சத்திரம் தொடங்க இருப்பது கொடுமையிலும் கொடுமை. நேற்று மட்டும் தமிழகத்தில் 19 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உச்சபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. நாளை முதல் கணித்ததை விட மிக மிக அதிகப்படியான வெப்பம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வெதர்மேன் ஜான் ஏற்கனவே கூறியிருந்தது போல், ஃபனி புயல் நம்மை ஏமாற்றினால் மக்கள் அனைவரும் இதுவரை சந்தித்திராத வெப்பத்தை காண வேண்டிருக்கும் என்றார். அதை வரும் நாட்களில் மக்கள் காண போகிறார்கள் என்பது நேற்றே உறுதியாகி விட்டது. பல்வேறு மாவட்டங்களில் ஏற்கனவே வெயில் சதம் அடித்துள்ளதால் சென்னை மக்கள் அதை நினைத்து இப்போதே நடுங்க தொடங்கி விட்டனர்.
ஒடிசாவில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிக மிக கனமழை! இந்திய வானிலை மையம் தகவல்.
தமிழகத்தில், ஏப்ரல், மே மாத வெயிலின் அளவு, 19 ஆண்டுகளுக்கு பின், உச்சபட்சமாக பதிவானது.வேலுாரில், 44.3 டிகிரி செல்ஷியஸ் பதிவானது. மே முதல் வாரத்தில், இதுவரை வேலுாரில் அதிகபட்சமாக, 44.4 டிகிரி செல்ஷியஸ் வெயில், 2000ம் ஆண்டில் பதிவானது. அதன்பின், நேற்று அதே அளவு வெயில் பதிவாகியுள்ளது.
இந்த கோடை கால வெப்பத்தில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள தயார்படுத்திஉக் கொள்ள வேண்டும். முடிந்தவரை வெளியில் வருவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.