தமிழகத்தில் விவசாயிகளின் நலன் கருதி விளைபொருட்களை நேரடியாக அவரவர் தோட்டத்திற்கே சென்று கொள்முதல் செய்து விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக தொகையை வரவு வைக்கும் முறை அமல்படுத்தப்பட்டிருக்கிறது. அந்தவகையில் திருச்சியிலும் 5 நேரடி கொள்முதல் நிலையங்களில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றது.
விவசாயிகள் இ-நாம் திட்டத்தில் விளைபொருட்களை விற்பனை செய்து பயன்பெற திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப்குமார் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது, "விவசாயிகள் பயன்பெறும் வகையில் மத்திய அரசால் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டம் (e-NAM) செயல்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களை இணையம் மூலம் ஒருங்கிணைப்பதன் மூலம் விவசாயிகளுக்கு அதிக விலை கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில் இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது 157 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் இ-நாம் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் திருச்சி, இலால்குடி, மணப்பாறை, துவரங்குறிச்சி மற்றும் துறையூர் ஆகிய 5 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் இ-நாம் திட்டம் செயல்பாட்டில் உள்ளது.
இ-நாம் முறையில் ஏல நடைமுறைகள் அனைத்தும் மின்னணு முறையில் இணையதளம் மூலம் மேற்கொள்ளப்படுவதால், பிற மாநிலம், பிற மாவட்டம் மற்றும் பிற ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் இருந்தும் வணிகர்கள் பங்கேற்று ஏலம் கோர முடியும் என்பதுடன் துல்லியமான தர அளவுகள் உறுதி செய்யப்படுவதால் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு அதிக விலை கிடைக்கின்றது. தொகை நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்குகளில் வரவாக்கப்பட்டு வருகிறது.
மேலும், இ-நாம் திட்டத்தில் பண்ணை வாயில் வணிகம் (FARM GATE SALES) என்ற முறை அரசால் தற்போது நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் விளைப்பொருட்களை ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களுக்கு எடுத்து வருவதற்கான ஏற்றுக்கூலி, போக்குவரத்து செலவினங்களை முழுமையாக குறைத்திடும் நோக்கில் விவசாயிகளின் இருப்பிடம் அல்லது தோட்டத்திற்கே ஒழுங்குமுறை விற்பனைக்கூட அலுவலர்கள் நேரில் சென்று இ-நாம் செயலி மூலம் விளைபொருட்களை விற்பனை செய்து தருவதுடன் பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படுவதை உறுதி செய்யும் வழியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, திருச்சி மாவட்ட விவசாயிகள் அனைவரும் அருகாமையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களை அணுகி இ-நாம் மற்றும் பண்ணை வாயில் வணிகம் மூலம் தாங்கள் உற்பத்தி செய்யும் வேளாண் விளைபொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கின்றேன்" எனத் தெரிவித்துள்ளார்
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“