/indian-express-tamil/media/media_files/2025/02/23/0tobbiZtAQL79Px5xaxt.jpeg)
மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் குறித்த 2-வது கட்டப் பேச்சுவார்த்தை நேற்று 22 ஆம் தேதி சண்டிகரில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பங்கேற்று திரும்பிய SKM (NP) தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் பி.ஆர் பாண்டியன் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
டெல்லியில் தொடர்ந்து போராடி வரும் விவசாயிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். வேளாண் கடன் முழுமையும் தள்ளுபடி செய்ய வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற மறுப்பதற்கு எதிராக கடந்த ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. வழக்கை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் பஞ்சாப் மாநில உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதி அரசர் நவாப் சிங் தலைமையில் உயர்மட்ட குழு அமைத்தது.
அக்குழு இந்தியா முழுவதும் விவசாயிகளின் கருத்துக்களை அறிந்து உடன் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். விவசாயிகள் பெற்றுள்ள கடன்களை நிபந்தனையின்றி தள்ளுபடி செய்து விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை கடந்த 2024 நவம்பர் 22ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையாக தாக்கல் செய்து அதை மத்திய அரசுக்கும் அனுப்பி வைத்தது. இதன் அடிப்படையில் மத்திய அரசு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என வலியுறுத்தி சம்யுக்த்த கிசான் மோச்சா அரசியல் சார்பற்ற அமைப்பின் SKM (NP) தேசிய ஒருங்கிணைப்பாளர் ஜெக்தீப் சிங் டல்லேவால் கடந்த 2024 நவம்பர் 26 முதல் 90 வது நாளாக சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.
டல்லேவாலோடு உச்சநீதிமன்ற நீதியரசர்கள் வீடியோ கான்பரசிங் மூலம் விசாரணை செய்தனர். சுமார் 20 நாட்கள் தொடர்ந்து விசாரணை செய்து மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கினர். மத்திய அரசு டல்லேவாலாவோடு பேச்சுவார்த்தை நடத்தி குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டது.
அதனை ஏற்று மத்திய அரசின் சார்பில் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி முதல் கட்ட பேச்சு வார்த்தையை மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில் சண்டீகரில் நடத்தினார். அக்கூட்டத்தில் 2வது கட்ட பேச்சுவார்த்தையை பிப்ரவரி 22 ல் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் நேற்று 22ம் தேதி சண்டீகரில் நடைபெற்றது.
அக்கூட்டத்தில் வேளாண்துறை அமைச்சர் சிவராஜ் சவ்கான், உணவுத்துறை அமைச்சர் பியூஸ்கோயல், வர்த்தகத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஆகியோர கொண்ட மூன்று அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தையை நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கி 9 மணி வரை நடத்தியது. விவசாயிகள் குறைந்தபட்ச ஆதார விலை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தனர். கடைசி வரையிலும் மூன்று அமைச்சர்களும் அதற்கான உத்தரவாதம் அளிக்கவில்லை. மீண்டும் சண்டீகரில் மார்ச் 19 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இப்பேச்சுவார்த்தைகளில் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு படுக்கையில் உள்ள டல்லேவால் நேரடியாக பங்கேற்க வேண்டும் என்று மத்திய அரசு விரும்பியதின் அடிப்படையில் போராட்ட களமான கணூரி பார்டரில் இருந்து 160 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சண்டீகருக்கு ஆம்புலன்ஸ் மூலம் 2 முறை அழைத்து வரப்பட்டார். இதனால் அவருடைய உடல் நலிவடைந்து வருகிறது. ஆனால் அவர் மீது அனுதாபம் கொண்டதாக நடந்து கொள்கிற மத்திய அரசு, பேச்சுவார்த்தையை சுமூகமாக முடித்து கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு முன் வராதது வேதனையளிக்கிறது. குறைந்தபட்ச ஆதார விலை கொண்டு வருவதற்கான இணக்கமான கருத்துக்களையும் மத்திய அரசு இதுவரையிலும் வழங்காதது மூலம் விவசாயிகளை வஞ்சிக்கிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பையும் மத்திய அரசு அவமதிக்கிறது.
எனவே, மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகளை கைவிட்டு 19ஆம் தேதி நடைபெற உள்ள கூட்டத்தில் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை துவங்கும் என்று நம்பிக்கையோடு எதிர்பார்க்கிறோம். அதற்கான வகையில் பிரதமர் தலையிட்டு தீர்வு காண்பதற்கு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என்றார்.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.