தமிழக அரசு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இதனை வலியுறுத்தி தமிழகம் தழுவிய விவசாயிகள் மகாசபை செங்கோட்டையில் நாளை மறுதினம் 16ஆம் தேதி நடைபெறுகிறது என சமித்த கிசான் மச்சா தமிழகத் தலைவர் பி.அய்யாக்கண்ணு, ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் ஆகியோர் திருச்சி பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.
இருவரும் கூட்டாக செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழ்நாட்டில் 5வது முறையாக வேளாண்மைக் என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நிதி ஒதுக்கீடு இல்லாமல் காகித பட்ஜெட்டாகவே தொடர்ந்து தாக்கல் செய்யப்படுவது விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிக்கிறது. நீர் பாசன திட்டங்களை மேம்படுத்த உரிய நிதியை ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். 4 ஆண்டுகளாக நிதி ஒதுக்கீடு இன்றி பாசன கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளது. காவிரி வைகை குண்டாறு, எண்ணெய்கோல் புதூர் திட்டங்கள் கிடப்பில் உள்ளது.
விவசாயிகளுக்கு நெல் குவிண்டால் ஒன்றுக்கு 3500ம் கரும்பு டன் ஒன்றுக்கு 5000ம் ரூபாய் வழங்கிட முன்வர வேண்டும். நில ஒருங்கிணைப்பு சட்ட 2023ஐ திரும்ப பெற வேண்டும். நெல் கொள்முதலை தனியாருக்கு தாரை வார்ப்பதை கைவிட வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகள் நாளைய சட்டமன்ற வேளாண் பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கிறோம்.
மத்திய அரசு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என ஓராண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து விவசாயிகள் போராடி வருகிறார்கள். 110 நாட்களைக் கடந்து ஜக்ஜித்சிங் டல்லேவால் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ளார். பல மாநிலங்கள் மத்திய அரசிடம் குறைந்தபட்ச ஆதார விலை கேட்டு தீர்மானங்கள் நிறைவேற்றி இருக்கிறது. தமிழ்நாடு அரசும் நாளைய சட்டமன்ற கூட்டத்தில் மத்திய அரசு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
பா.ஜ.க ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடப்பாண்டு நெல் குவிண்டால் 1க்கு 3500 ரூபாய் விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்கிறார்கள். தமிழ்நாட்டில் நெல் டன் ஒன்றுக்கு ரூ 3500ம், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ 5000ம் விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்துகிறோம்.
மத்திய அரசு பஞ்சாப், ஹரியானா மாநிலங்களுக்கு மட்டும் குறைந்தபட்ச ஆதரவு விலை கொடுத்து விட்டு மற்ற மாநிலங்களை கைவிட்டு விடலாம் என்ற உள்நோக்கோடும், போராட்டத்தின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் செயல்படுவதை அனுமதிக்க மாட்டோம். இதனை வலியுறுத்தி வரும் 16ஆம் தேதி தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் தமிழகம் தழுவிய மாபெரும் விவசாயிகள் மகாசபை கூட்டம் நடைபெற உள்ளது ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்க இருக்கிறார்கள்.
தேசிய ஒருங்கிணைப்பாளர்கள் அபிமன்யூ கொஹார், காக்கா சிங்கோத்ரா, சுக்வீந்தர் சிங், லக்வீந்தர் சிங் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர் என்றனர்.
இந்த செய்தியாளர் சந்திப்பில், மாநில துணைத் தலைவர் வி.எம்.ஃபாரூக், துணைச் செயலாளர் எம்.செந்தில்குமார், மகேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
க.சண்முகவடிவேல்