கோவில்பட்டி அருகே பயிர்கள் சேதமானதால் மனவருத்தத்திற்கு ஆளான விவசாயி விவசாய நிலத்திற்கு அருகே உள்ள மரத்தில் சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விவசாயி தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு, கடைசி செய்தியாக தனது பேத்திக்கு ‘மித்ரா மன்னித்துவிடு’ என்று அருகே இருந்த சுவரில் எழுதி வைத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள பிள்ளையார்நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணசாமி (58) விவசாயி. இவர் தனது மனைவி மஹாலக்ஷ்மி, மகள் அபிராமி, பேத்தி மித்ராவுடன் வசித்து வந்தார். நாராயணசாமி விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் உள்ள ஒரு ஆலையில் வேலை செய்துவந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு ஆலை வேலையை விட்டுவிட்டு பிள்ளையார்நத்தம் கிராமத்தில் தனக்கு சொந்தமாக உள்ள 5 ஏக்கர் நிலத்தில் விசாயம் செய்யத் தொடங்கினார்.
விவசாயி நாராயணசாமி கடந்த ஆண்டு விவசாயத்தில் நல்ல லாபகரமாக அறுவடை செய்த பிறகு, இந்த ஆண்டு மக்காச்சோளமும் உளுந்தும் பயிர் செய்துள்ளார்.
போதுமான மழை இல்லாததாலும் பூச்சிகள் மற்றும் புழுக்களும் அவருடைய மக்காச்சோளம் பயிர்களைத் தாக்கியது. உளுந்து பயிர்களை மஞ்சள் நோய் தாக்கியுள்ளது.
மக்காச்சோளப் பயிர்களும் உளுந்து பயிர்களும் கடுமையாக சேதமடைந்ததால் விவசாயி நாராயணசாமி கடந்த சில நாட்களாக கடும் மன வருத்தத்தில் இருந்தார்.
விவசாயி நாராயணசாமி சனிக்கிழமை காலை தனது குடும்பத்தினரிடம் நிலத்திற்கு சென்று பயிர்களைப் பார்த்துவிட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு நிலத்திற்கு சென்றார். ஆனால், அவர் திரும்பி வரவே இல்லை. நீண்ட நேரமாக அவர் வீட்டுக்கு வராத நிலையில், அவரை தேடிச் சென்று பார்த்தபோது, அவர் தனது விவசாய நிலத்திற்கு அருகே உள்ள ஒரு மரத்தில் தூக்கியிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
விவசாயி நாராயணசாமி தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு, அங்கிருந்த ஒரு சுவரில் தனது அன்பான பேத்திக்கு கடைசி செய்தியாக ‘மித்ரா மன்னித்துவிடு’ என்று எழுதியிருப்பதைப் பார்த்து பலரும் சோகத்தில் மூழ்கினர்.
இது குறித்து தகவல் அறிந்துவந்த நாலாட்டின்புதூர் காவல் நிலைய போலீசார் விவசாயி நாராயணசாமியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், விவசாயி தற்கொலை செய்துகொண்டது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோவில்பட்டி அருகே பிள்ளையார்நத்தம் கிராமத்தில் பயிர்கள் சேதம் அடைந்ததால் மனமுடைந்த விவசாயி நாராயணசாமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook