/indian-express-tamil/media/media_files/2025/08/12/farmers-association-leader-pr-pandian-demands-tn-govt-tamil-news-2025-08-12-19-48-17.jpg)
"தமிழக அரசு உர உற்பத்தி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இணை இடுபொருளுக்கான நிபந்தனைகளை கைவிட வேண்டும். தட்டுப்பாடு இல்லாமல் உரங்களை இருப்பு வைக்க வேண்டும்" என்று பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் பி ஆர் பாண்டியன் தலைமையில், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
காவிரி டெல்டா மாவட்டங்களில் கோடை குருவை கொள்முதலில் மிகப்பெரிய குளறுபடிகள் நீடித்து வருகிறது. கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மூன்று மாத காலமாக கொள்முதல் நிலைய வாயில்களிலேயே அடுக்கி வைக்கப்பட்டு மழையில் நனைந்து வீணடிக்கப்பட்டு வருகிறது. தற்போது அறுவடை செய்து வரும் நெல்லை இடமின்றி விவசாயிகளிடம் கொள்முதல் செய்யாமல் திறந்தவெளியில் கொட்டி வைக்கப்பட்டு மழை நீரில் அடித்து செல்லப்படுவதை பார்த்து கண்ணீர் விட்டு கதறுகிறார்கள். கொள்முதல் செய்த நெல்லை அன்றாடம் அறவை ஆலைகளுக்கு கொண்டு செல்லாமல் தடைபட்டுள்ளது.
மேட்டூர் அணை உரிய காலத்தில் திறக்கப்பட்டு தற்போது 5 லட்சம் ஏக்கருக்கு மேல் காவிரி டெல்டாவில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. செப்டம்பர் 1முதல் அறுவடைக்கு வரவுள்ளது. செப்டம்பர் இறுதிக்குள் அறுவடை பணி முடிந்து விடும். இந்நிலையில் புதிய விலையில் செப்டம்பர் 1 முதல் நெல் கொள்முதல் செய்வதற்கு தமிழக அரசு அவசர கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் உடனுக்குடன் அரவை ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
திறந்தவெளி கிடங்குகள் இரண்டு ஆண்டுகளாக கைவிடப்பட்டுள்ளது. உடனடியாக திறந்தவெளி கிடங்குகளை அமைத்து கொள்முதல் செய்யும் நெல்லை திறந்தவெளிக் கிடங்குகளில் இருப்பு வைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். டி.ஏ.பி யூரியா பொட்டா உள்ளிட்ட உரங்களுக்கு மிகப்பெரும் கட்டுப்பாடும், தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இணை இடுபொருள் வாங்கினால் தான் உரம் வழங்க முடியும் என்று வணிக நிறுவனங்கள் நிபந்தனை விதிக்கிறார்கள்.
தமிழக அரசு உர உற்பத்தி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இணை இடுபொருளுக்கான நிபந்தனைகளை கைவிட வேண்டும். தட்டுப்பாடு இல்லாமல் உரங்களை இருப்பு வைக்க வேண்டும். குறுவை,சம்பா சாகுபடி உரத்தட்டு பாட்டால் மிகப்பெரும் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளதை உணர்ந்து நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினோம். காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாட்டு அணை கட்டுவதற்கு கர்நாடக தமிழக விவசாயிகள் எதிர்த்து வரும் நிலையில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.இது சட்டவிரோதமானது என அறிவித்து தடுத்து நிறுத்திட வேண்டும்.
உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் முல்லைப் பெரியாறு அணையில் 142அடி கொள்ளளவை ரூல்கர்வ் முறையை காரணம் காட்டி சாதாரண மழைக் காலங்களிலும் கேரள அரசு தண்ணீரை திறந்து வீணடிக்கிறது. இதனை தடுத்து நிறுத்தி 142 கொள்ளளவு உயர்த்துவதற்கு அனுமதிக்க வேண்டும். 152 அடி கொள்ளளவை உயர்த்த பேபி அணையை பலப்படுத்திட உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மரபணு மாற்று தொழில்நுட்பம் மற்றும் மரபணு திருத்தப்பட்ட விதைகள் பயிரிடுவதற்கு போடப்பட்ட ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஆகஸ்ட் 26 இல் டெல்லி பாராளுமன்றம் முன் முற்றுகை போராட்டம் நடத்த உள்ளோம்.
இவ்வாறு தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி ஆர் பாண்டியன் தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் தலைவர் ஆர் திருப்பதி, வண்ட முல்லைப் பெரியாறு பாசன விவசாய தலைவர் எல். ஆதிமூலம், மாநில அமைப்பு செயலாளர் நாகை ஸ்ரீதர், தஞ்சை மண்டல தலைவர் துரை பாஸ்கரன், மாநில இளைஞர் அணி செயலாளர் மகேஸ்வரன், மாநிலத் துணைச் செயலாளர் எம்.செந்தில்குமார், புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பத்மநாபன், திருவாரூர் மாவட்ட தலைவர் எம். சுப்பையன், செயலாளர் குடவாசல் சரவணன், மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் விஸ்வநாதன், தலைவர் முருகேசன துணைச் செயலாளர் பன்னீர்செல்வம். நாகை மாவட்ட துணை செயலாளர் , திருமருகள் சேகர், வெங்கடேசனஉள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.