/indian-express-tamil/media/media_files/2025/09/09/farmers-association-leader-pr-pandian-on-periyakudi-hydrocarbon-well-closed-tn-govt-tamil-news-2025-09-09-21-03-33.jpg)
கனிம வளங்கள் எடுப்பதற்கு மக்கள் கருத்து கேட்புக் கூட்டங்கள் நடத்தப்படாது என்ற மத்திய அரசின் முடிவு மக்களின் குடியுரிமையை அபகரிக்கும் செயல் என்று பி.ஆர் பாண்டியன் விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் திருவாரூரில் தெரிவித்ததாவது:-
மத்திய அரசு தொடர்ந்து விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் குடியுரிமைகளை அபகரிக்கும் நோக்கோடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக ஹைட்ரோ கார்பன்,உள்ளிட்ட இயற்கை எரிவாயு, கச்சா, கனிம வளங்கள் எடுப்பதற்கும், அணு உலைகள் அமைப்பதற்கும் இனி மக்களிடம் கருத்து கேட்பதில்லை என மத்திய அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இச்செயல் முற்றிலும் இந்திய மக்களின் குடியுரிமையை அபகரிக்கும் உள்நோக்கம் கொண்டது.
விளை நிலங்களையும், மண்ணையும் மக்களிடம் அபகரித்து பன்னாட்டு பெரு முதலாளிகளிடம் அடகு வைத்து மக்களை அகதிகளாக வெளியேற்றும் நிலை ஏற்படும். மக்களின் ஜனநாயக உரிமைகளை பறிக்கும் வகையிலும், முகவரியை அழிக்கும் உள்நோக்கோடு குரல்வளையை நெரிக்கும் வகையிலும் மத்திய அரசு சட்டங்களை கொண்டு வந்து மக்களை ஒடுக்க நினைப்பது ஏற்க முடியாது. ஆங்கிலேயரிடமிருந்து போராடி விடுதலையைப் பெற்றோம். மீண்டும் பன்னாட்டு பெரும் முதலாளிகளிடம் இந்திய மண்ணை அடகு வைப்பதற்கு ஆதரவான சட்டங்களை மத்திய அரசு கொண்டு வருமேயானால் ஒட்டுமொத்த இந்திய மக்களும், விவசாயிகளும், மாணவர்களும் ஒன்றிணைந்து மறுசுதந்திரம் கேட்டு போராடும் நிலை ஏற்படும் என எச்சரிக்கை செய்கிறேன்.
தமிழக அரசு மத்திய அரசின் நடவடிக்கை குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும். தமிழகத்தில் நில ஒருங்கிணைப்பு சட்டம் -2023மூலம் ஏற்கனவே மத்திய அரசுக்கு துணை போகிறதோ? என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இச்சட்டம் குறித்து தனது கொள்கை நிலையை தமிழக முதலமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும்
இவ்வாறு பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார்.
செய்தி: க.சண்முகவடிவேல்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.