/indian-express-tamil/media/media_files/LhHHkv4cVqW87zsbus81.jpg)
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன்
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் (PR Pandian) மன்னார்குடியில் இன்று (27.05.2024) செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முழுமையிலும் கோடை மழை பேரழிவு பெருமழையாகப் பெய்து நெல் சாகுபடி அடியோடு அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் அழிய தொடங்கியுள்ளது. மாற்று பயிர் சாகுபடியை தமிழக அரசு வற்புறுத்தியதை ஏற்று பருத்தி சாகுபடி பெருமளவில் மேற்கொண்டனர். முதல் பட்டம் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் முழுமையாக அழிந்துவிட்டது. எள், நிலக்கடலை உள்ளிட்ட எண்ணெய் வித்து பயிர்களும் அழிந்து போயிருக்கிறது. வாழை உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்கள் முழுமையாக அழிந்து உள்ளது.
தமிழ்நாடு அரசு தேர்தல் நடத்தை விதிமுறை காரணம் காட்டி பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுப்பு நடத்தி இழப்பீடு வழங்க மறுப்பது ஏற்கத்தக்கதல்ல. சிறப்பு அனுமதியை பெற்று உடனடியாக கணக்கெடுப்பு நடத்திட முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
நெல் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.35,000மும், பருத்திக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.50,000மும், வாழைக்கு ரூபாய் 1 லட்சமும் இழப்பீடாக வழங்கிட வேண்டும். மற்ற பயிர்களுக்கு உற்பத்தி செலவை கணக்கிட்டு உரிய இழப்பீடு வழங்கிட முன்வர வேண்டும்
தமிழ்நாட்டில் நதிநீர் உரிமைகள் பறிபோய் கொண்டு இருக்கிறது. முல்லைப் பெரியாறு அணை வழுவிழுந்து விட்டதாக கூறி புதிய அணை கட்டுவதற்கான கேரளா அரசு சட்ட விரோதமாக கொடுத்த விண்ணப்பத்தின் மீதாக ஆய்வு நாளை தொடங்க உள்ளது. இதனை தமிழ்நாடு அரசு மூடி மறைக்க முயற்சிப்பது வண்மையாக கண்டிக்கத்தக்கது.
புதிய அணை கட்டப்பட்டால் மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் உள்ள விளை நிலங்கள் முற்றிலும் அழிந்து போகும் நிலையும், குடிநீர் அடியோடு அழிந்து விடும் நிலையால், மக்கள் அகதிகளாக வெளியேறும் பேராபத்து ஏற்படும் சூழல் உருவாகியிருக்கின்றது.
உச்சநீதிமன்றம் வலுவாக அணை உள்ளது என்று பலமுறை தீர்ப்பு சொல்லியும், கேரளா அரசு ஏற்க மறுத்து நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் புதிய அணை கட்டுவதற்கான விண்ணப்பத்தை வழங்கியுள்ளது. இதனை மத்திய அரசு நிராகரிக்க வலியுறுத்தி சுமார் 50-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து நாளை மே 28 காலை 11 மணிக்கு மதுரை வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றார்.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.