சென்னையில் ஜனவரி 22-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டமும், குடியரசு தினத்தில் தமிழகம் முழுவதும் டிராக்டர் பேரணி நடைபெறும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கத் தலைவர்கள் பி. அய்யாக்கண்ணு, பி.ஆர். பாண்டியன் கூட்டாக அறிவித்துள்ளனர்.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள பத்திரிக்கையாளர்கள் மன்றத்தில் சமித்த கிசான் மோச்சா (அரசியல் சார்பற்றது) SKM (NP)தமிழ்நாடு ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் பி.அய்யாக்கண்ணு பி.ஆர். பாண்டியன் கூட்டாக பேசியதாவது;
எஸ்.கே.எம் (NP) தேசிய ஒருங்கிணைப்பாளர் ஜக்ஜித்சிங் டல்லேவால் கடந்த நவம்பர் 26 முதல் குறைந்தபட்ச ஆதார விலை நிரந்தர சட்டம் கோரி கனூரி பார்டரில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்.
உச்ச நீதிமன்றம் அமைத்த குழு உடனடியாக குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டுவரப்பட வேண்டும், விவசாயிகள் பெற்றுள்ள கடன் முழுமையும் தள்ளுபடி செய்ய வேண்டும். இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் அடிப்படை நோக்கம் கொண்ட மின்சார ஒழுங்குமுறை ஆணைய சட்டத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசு முன் வரவேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் நவாப் சிங் குழு பரிந்துரை செய்துள்ளது இதனை ஏற்று செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
/indian-express-tamil/media/media_files/2025/01/17/BBb36JG9TIR6DVp8030Y.jpeg)
மத்திய அரசு போராடுகிற விவசாயிகளோடு பேச்சுவார்த்தை நடத்த மறுக்கிறது. உச்ச நீதிமன்ற உத்தரவையும் நிறைவேற்ற மறுத்துவரும் நிலையில் டல்லேவால் உடல் நலம் மோசமடைந்து வருகிறது. உடனடியாக அவரை பாதுகாக்க வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலநிர்ணய சட்டம் கொண்டுவர வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் குடியரசு தினமான ஜனவரி 26 ஆம் தேதி இந்தியா முழுவதும் டிராக்டர் பேரணி நடைபெற உள்ளது. தமிழகத்திலும் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் நடக்கும் பேரணியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்க இருக்கின்றனர். இதற்கு முன்னதாக ஜனவரி 22 ஆம் தேதி சென்னை எழும்பூரில் நடைபெறும் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழகம் முழுமையிலிருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்க உள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற குழு பரிந்துரையை உடனடியாக நிறைவேற்றி நல்லேவால் உயிரை பாதுகாக்க வேண்டும் என கடிதம் மூலம் வலியுறுத்த வேண்டும். தமிழ்நாடு அரசு நில ஒருங்கிணைப்பு சட்டம் - 2024 இந்தியாவில் எந்த மாநிலமும் கொண்டு வராத மிகப் பெரிய மோசமான சட்டமாகும். இதன் மூலம் தமிழக மக்கள் தனது முகவரியை முழுமையாக இழந்துள்ளனர்.
நிதி பற்றாக்குறை காரணங்காட்டி விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய மானியங்கள் தமிழ்நாடு அரசு நிறுத்தி வைத்துள்ளது. மூன்றாண்டு காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள டிராக்டர் மானியம் உள்ளிட்ட உழவு இயந்திரங்களுக்கான மானிய திட்டங்களுக்கான நிதிகள் உடல் விடுவிக்கப்பட வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் மதுரை மாவட்டங்களில் கடன் வழங்க மறுத்து தொகை விடுவிக்காமல் உள்ளது ஏமாற்றம் அளிக்கிறது. உடனடியாக உரிய தொகை விடுவிக்க வேண்டும்.
தமிழகத்தில் அரசுத் துறைகளில் லஞ்ச ஊழல் முறைகேடுகள் தீவிரம் அடைந்துள்ளது.அதனை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதற்கு தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.
விவசாயிகள் கடன் வசூல் என்கிற பேரில் வங்கிகள் சொத்துக்களை சூறையாட முயற்சிக்கிறது. ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலுக்கு முரணாக செயல்படுகிறது.சொத்து மதிப்பின் மீது மோகம் கொண்டுள்ள வங்கி அதிகாரிகள் தனியார் வசூல் முகவர்கள் என்கிற பெயரில் சொத்துக்களை அபகரிக்க முயற்சிக்கிறார்கள். இதனால் பாதிக்கப்படும் விவசாயிகள் தற்கொலை நிலைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் மூலமாக ரிசர்வ் வங்கி விதிமுறைகளைப் பின்பற்றி வங்கிகள் கடன் வசூல் செய்வதற்கான ஒரே தவணையில் கடன்களை திரும்ப செலுத்தும் வழிகாட்டுதலை செயல்படுத்த வேண்டும். அதனை மாவட்ட நிர்வாகமும் காவல் துறையும் கண்டிப்புடன் வங்கிகள் பின்பற்றுவதை உறுதி செய்வதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஈரோடு இடைத்தேர்தலில் விவசாயிகள் ஆதரவு உண்டா என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த போது, இத்த தேர்தல் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அல்ல, எனவே, 2026 சட்டமன்ற தேர்தல் வரையிலும் திமுகவின் விவசாய விரோத கொள்கை தீவிரமடைமானால் அதனை எதிர்த்து விவசாயிகள் கலவரங்கள் நேரிடும் என எச்சரிக்கிறோம் என்றனர்.
எஸ்.கே.எம் (NP)தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் எல். ஆதிமூலம், தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மாநில இளைஞரணி செயலாளர் மேலூர் அருண், தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் எம்.செந்தில்குமார். சிவகங்கை மாவட்ட செயலாளர் தவம், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் அருமைராஜ், தேசிய தென்னிந்தியகள் நதிகள் இணைப்பு சங்க நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், தங்கமுத்து உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்