தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை எதிரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் 50-வது நாளாக போராட்டம் நடத்தி வரும் அய்யாகண்ணு தலைமையிலான விவசாயிகள், பிரதமர் மோடி வேடமடைந்தவரின் காலில் விழுந்து, நெல்லுக்கு உரிய விலை கொடுக்கல, கரும்புக்கு விலை கொடுக்கல என விவசாய உற்பத்தி பொருள்களுக்கு உரிய விலை கொடுங்கள், எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இந்த காத்திருப்பு போராட்டத்தின் கோரிக்கைகளாக:- 2016ல் வறட்சியின் பொழுது பெரிய விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்யுங்கள் என்று உயர்நீதிமன்றம் கூறிய பிறகு, பெரிய விவசாயிகள் வாங்கிய குறுகிய கால கடனை விவசாயிகளின் கையெழுத்தை பெறாமலே போலியாக கையெழுத்தை போட்டு மத்திய கால கடனாக அ.தி.மு.க அரசு மாற்றி வைத்தது, ஆகையால் விவசாய கடனை தள்ளுபடி செய்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டுகிறோம்.
மேட்டூரில் இருந்து வெள்ள நீராக கடலில் கலக்கும் வெள்ள நீரை மேட்டூர் அணையின் வடபுறம் கால்வாய் வெட்டி, அய்யாற்றுடன் இணைத்து சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்ட விவசாயிகளை காப்பாற்ற வேண்டுகிறோம்.
அதேபோல் ஆலடியாறு அணையில் துளையிட்டு கீழ்கூடலூர், கம்பம், தேனி, பெரியகுளம், திண்டுக்கல், எரியோடு, கடவூர் வழியாக பொன்னியாறு அணையில் இணைத்தால், தேனி, மதுரை, திண்டுக்கல், கரூர், திருச்சி மாவட்ட விவசாயிகள் பயன்பெற முடியும் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், காவிரியில் மேகதாது அணைக்கட்டக்கூடாது என்றும் காவிரியில் மாதாமாதம் தண்ணீர் திறக்க மத்திய அரசை வற்புறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
விவசாயிகள் உரிமைக்காக ஜனநாயக நாட்டில், டெல்லி சென்று போராட முதலமைச்சர் அனுமதி வழங்க வேண்டும். அதேநேரம் தமிழக முதல்வர் விவசாயிகளை சந்திக்க மறுப்பது ஏன் என்ற கேள்வியையும் எழுப்பி, மத்திய மாநில அரசுக்கு எதிராக கோஷமிட்டவாறு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.