/tamil-ie/media/media_files/uploads/2022/12/Farmer-Protest-Trichy.jpeg)
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் செங்கரும்புகளுடன் இன்று (டிசம்பர் 26) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொங்கல் பரிசுத் தொகுப்பில் செங்கரும்பு வழங்க வேண்டும். கரும்புக்கு நியாயமான விலை வழங்க வேண்டும். செங்கரும்பு ஒன்று ரூ.15 என்ற விலைக்கு அரசே கொள்முதல் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படியுங்கள்: வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் கோவிலில் முதலுதவி மையம்- ஆம்புலன்ஸ் வசதிகள் ஏற்பாடு
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
/tamil-ie/media/media_files/uploads/2022/12/WhatsApp-Image-2022-12-26-at-17.06.27.jpeg)
இதேபோல், தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு, தேங்காய், வெல்லம் ஆகியவற்றை சேர்க்க வலியுறுத்தி பா.ஜ.க. விவசாய அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு விவசாய அணி மாநகர் மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/12/WhatsApp-Image-2022-12-26-at-17.06.28-1.jpeg)
ஆர்ப்பாட்டத்தில் தேசிய செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், புறநகர் மாவட்ட விவசாய அணி தலைவர் சசிக்குமார், மாநில விவசாய அணி துணைத் தலைவர் கோவிந்தராஜன், வரகனேரி பார்த்திபன், ஒண்டிமுத்து, காளீஸ்வரன், தண்டபாணி, கள்ளிக்குடி ராஜேந்திரன், சந்துரு, முத்தையனன், கும்பக்குறிச்சி பழனிச்சாமி, ஏ.ஆர்.பாட்சா மல்லி செல்வம், மிலிட்டரி நடராஜன், முருகானந்தம், முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேஸ்குமார், பழனிக்குமார், நாகேந்திரன், பூண்டு பாலு மற்றும் திரளானோர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பா.ஜ.க.வினர் கைகளில் கரும்பு மற்றும் தேங்காய்களை ஏந்தி தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
அதேபோல், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் ஆணைக்கிணங்க, திருச்சி மாவட்ட த.மா.கா. விவசாய பிரிவு தலைவர் புங்கனூர் எஸ்.செல்வம் தலைமையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று திரண்டனர்.
/tamil-ie/media/media_files/uploads/2022/12/WhatsApp-Image-2022-12-26-at-17.06.29.jpeg)
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு விவசாயிகள் உற்பத்தி செய்யும் செலவினங்களை கணக்கிட்டு நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3000, கரும்புக்கு ரூ.4000 நிர்ணயம் செய்ய வேண்டும். தாலுகா அளவில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் வருடம் முழுவதும் செயல்படும் வகையில் அமைக்க வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில் 41 கிலோ மூட்டைக்கு ரூ.40 கமிஷனும், அரை கிலோ கூடுதல் நெல்லும் கொள்முதல் செய்வதை தடுக்க வேண்டும். மலர் சாகுபடி விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கங்களில் வழங்கும் ஆறு மாத கடனை ஒரு வருட கடனாக மாற்றி வழங்க வேண்டும். மலர் சாகுபடி பயிர்களை காப்பீடு செய்ய வழிவகை செய்ய வேண்டும். வேளாண் காப்பீட்டு திட்டத்தை தேசிய அளவில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் எளிமையாக்க வேண்டும். வட்டார அளவில் முகவர்களை நியமிக்க காப்பீடு நிறுவனங்கள் அல்லது அரசு நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாண் கால்நடைகளுக்கான உலர் தீவனங்களை, கால்நடை வளர்ப்பாளர்களுக்கும் மானிய விலையில் ரேஷன் கடைகள் மூலமாக நேரடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர்நிலைகளைப் பாதுகாக்க கிராம, வட்டார, மாவட்ட, மாநில அளவில் விழிப்புணர்வு பாதுகாப்பு கமிட்டி அமைக்க வேண்டும். மேலும் நிலத்தடி நீர்மட்டம் செரிவூட்டு மையம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதில் மாநில பொருளாளர் ராஜேந்திரன், மாவட்ட துணை தலைவர் சாகுல் ஹமீது, மாநில துணைத்தலைவர் தேவராஜ், தியாகராஜன், சுப்பிரமணியன் அழகப்பன் ஜோசப், மணிகண்டன், பொன்ராம் உள்ளிட்ட விவசாயிகளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
/tamil-ie/media/media_files/uploads/2022/12/WhatsApp-Image-2022-12-26-at-17.06.28.jpeg)
இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் முகாம் என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அதே நேரம் எப்பொழுதுமே நூதன போராட்டத்தை கையில் எடுக்கும் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகளை கண்ட போலீசார் மிகுந்த எச்சரிக்கையுடன் காணப்பட்டனர்.
ஒரு பக்கம் விவசாயிகள், மறுபக்கம் அரசியல் கட்சி சார்புடைய விவசாயிகள் என பா.ஜ.க.,வினரும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினரும் கரும்புகளை எடுத்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீசாருக்கு பெருந்தலைவலியாகவே இருந்தது எனலாம்.
க. சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.