Farmers rail roko protest in Trichy: திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், மத்திய மாநில அரசுகளை கண்டித்தும், விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் குடமுருட்டி ரயில்வே மேம்பாலம் அருகே தண்டவாளத்தில் அமர்ந்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்டா மாவட்டங்களில் சாகுபடி செய்து வரும் குறுவைப் பயிர்களைக் காப்பாற்ற கர்நாடகாவில் இருந்து நீர் திறந்து விட பிரதமர் மோடி வலியுறுத்த வேண்டும் எனவும், டெல்டாவை பாலைவனமாக்கி பெட்ரோல், டீசல், மீத்தேன் போன்ற கனிம வளங்களை சுரண்டும் கார்ப்பரேட் கம்பெனியைக் கண்டித்தும், காவிரியில் நீர் திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசு மற்றும் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவையும் கண்டித்தும், தமிழகத்தில் உள்ள விவசாயிகளை காப்பாற்றுவதற்கு மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி கோவை ரயில் வழித்தடத்தில் குடமுருட்டி ஆற்றுப்பாலம் அருகே தண்டவாளத்தில் அமர்ந்து அப்பகுதியில் வரும் ரயிலை மதிக்க முயற்சி செய்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே மற்றும் கண்ட்டோன்மென்ட் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விவசாயிகளை அப்புறப்படுத்தி அழைத்துச் சென்றனர்.
இது குறித்து அய்யாக்கண்ணு தெரிவிக்கையில்; கடந்த 60 நாட்களுக்கும் மேலாக நூதன முறையில் எனது தலைமையில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த வகையில், இன்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோம். ரயிலை மறிப்பதற்கு முன் காவல்துறையினர் எங்களை மறித்து பிடித்து சென்று விட்டனர்.
இந்த ரயில் மறியல் போராட்டத்தின்போது தமிழகத்திலிருந்து கர்நாடகாவிற்கு கொடுக்கும் மின்சாரத்தை உடனடியாக துண்டிக்க வேண்டும் எனவும், மத்திய அரசு தமிழக விவசாயிகளை வஞ்சிக்கிறது என்ற கண்டன முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டோம்.
இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி களையச் செய்தனர் என்றார்.
முன்னதாக, தமிழகத்திற்கு காவிரியில் இருந்து நீர் கொடுக்கக் கூடாது என்று வலியுறுத்தி கர்நாடக மாநிலம் முழுவதும் கடந்த சில நாட்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
மேலும், இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற பந்த்தைக் கண்டித்தும், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மாதம் மாதம் கர்நாடக அரசு காவிரியில் நீர் திறக்காததைக் கண்டித்தும், கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா உருவப்படத்தை எரித்தும், காவிரி ஆற்றில் கரைக்கும் இறுதிச் சடங்கும், காவிரியில் தண்ணீர் திறக்கும் வரை காவிரி ஆற்றுக்குள்ளே கூடாரம் அமைத்து போராட்டம் நடத்தப்படும் என காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் பலரும் போராட்டம் நடத்தியது என்பதும் நேற்று கர்நாடக பேருந்துகளை மறித்து போராட்டம் நடத்திய விவசாயிகள் இன்று திருச்சி பெங்களூரு செல்லும் ரயில் வழித்தடத்தில் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“