திருச்சி பன்னாட்டு விமான நிலைய விரிவாக்கத்திற்கு கீழங்குறிச்சி கிராம பகுதியில் நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. இதில் ஒரு சிலர் நிலத்தை விமான நிலைய விரிவாக்கத்திற்கு அரசுக்கு கொடுத்துள்ளனர். பலர் தங்களுக்கான நிலத்திற்கு போதிய மதிப்பீடு நிர்ணயம் செய்யப்படாததால் விவசாய நிலங்களை கொடுக்க விரும்பாத 21 நபர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். மேலும் 100 ஏக்கர் மதிப்புள்ள 21 விவசாய இடங்களில் தற்போது வரை விவசாய நடைபெறுவதாகவும் ஆனால் அந்த இடங்கள் தரிசு நிலங்கள் எனக்கூறி குறைந்த விலையில் மாவட்டம் நிர்வாகம் நிலத்தை கையகப்படுத்த முயற்சிப்பதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது. இதனால் நிலங்களை கொடுக்க விரும்பவில்லை எனக்கூறி 21 நபர்களும் இணைந்து ஒரே வழக்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த நிலையில், விவசாய இடத்திற்கு சொந்தமான 21 நபர்களை திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி நேற்று(மே 12) மதியம் 3 மணி அளவில் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். அதன்படி, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு 2.30 மணியளவில் 21 விவசாயிகளும் வந்தனர். வெகு நேரம் காத்திருந்தும் வருவாய் அலுவலர் அபிராமி வரவில்லை. அதனை தொடர்ந்து 5.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் வரவேண்டும் எனக் கூறி விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், ஒவ்வொருவராக வந்து தன்னிடம் நிலம் குறித்து விளக்கம் அளிக்கும்படி அபிராமி கூறிவிட்டு சென்றுள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் 21 பேரும் ஒன்றாகவே ஒரே வழக்காக நீதிமன்றத்தில் தொடர்ந்து உள்ளோம். ஆகையால் அனைவரிடமும் ஒன்றாகத் தான் கருத்து கேட்க வேண்டும் எனக் கூறி தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சு வார்த்தைக்கு அழைத்து விட்டு மாவட்ட நிர்வாகம் முறையாக அணுகவில்லை எனவும் விவசாயிகள் குற்றஞ்சாட்டினர். இதையடுத்து திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.

நேரில் வந்த திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலைய உதவி ஆணையர் கென்னடி விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். விவசாயிகள் உடன்படாததால், மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் தவச்செல்வம் உள்ளிருப்பு போராட்டம் நடத்திய விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இரண்டு நாட்களில் உரிய தீர்வு காணப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
டி.ஆர்.ஓ மரியாதை குறைவாக நடத்தினார்
பின்னர் வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசிய விவசாயிகள், “எங்கள் நிலம் முழுமையான விவசாய நிலம், அதில் பல ஆண்டுகளாக நாங்கள் விவசாயம் செய்து கொண்டிருக்கிறோம். இந்த நிலையில் விமான நிலைய விரிவாக்கத்திற்காக நிலம் கையெடுப்பு முறையில் எங்களிடம் விமான நிலைய அதிகாரிகள், மாவட்ட அதிகாரிகள் நேரிலும், தபால் மூலமும் தெரிவித்தனர். விமான நிலைய விரிவாக்கத்திற்காக பொன்மலைப்பட்டி திருநகர் பகுதியில் குடியிருப்பு பகுதிகளை கையகப்படுத்தி விட்டனர். கல்கண்டார் கோட்டை, கிழக்குறிச்சி பகுதியில் உள்ள விவசாய நிலங்களை கையகப்படுத்துவதில் குறைவான நிதியை ஒதுக்கினர். அதில் எங்களுக்கு உடன்பாடு இல்லாததால் 21 பேர் ஒன்றாக நீதிமன்றத்தை நாடினோம். உயர் நீதிமன்றம் விவசாயிகளிடம் சமூக பேச்சுவார்த்தை நடத்தி நிலம் எடுப்பதற்கு தேவையான முறையான அணுகுமுறையில் அணுகுமாறு விமான நிலைய அதிகாரிகளுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் உத்தரவிட்டது.

இந்த சூழலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டி.ஆர்,ஓ தலைமையில் பேச்சுவார்த்தைக்கு 21 விவசாயிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த அழைப்பின்படி நாங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தோம். மதியம் அலுவலகம் வந்த எங்களை மாலை 5 மணிக்கு வந்து சந்தித்த டி.ஆர்.ஓ அபிராமி மிகவும் அரகண்டாக நடந்து கொண்டார். இங்கே வந்திருக்கும் விவசாயிகள் ஒவ்வொருவரும் வயது முதிர்ந்தவர்கள். ஒவ்வொருவரும் 10 ஏக்கர் முதல்15 ஏக்கர் வரை நிலம் வைத்திருப்பவர்கள். என்னால் இப்போது உங்களிடம் பேச முடியாது. ஒவ்வொருவரும் தனித் தனியாக என்னை வந்து சந்திங்க-னு சொல்லிவிட்டு 5 நிமிடத்தில் கூட்ட அரங்கை விட்டு வெளியேறி விட்டார்.
மாவட்ட நிர்வாகம் அழைத்ததின் பேரிலேயே நாங்கள் ஆட்சியர் அலுவலகம் வந்தோம். எங்களுக்கு முறையான மரியாதையை கொடுக்காத டி.ஆர்.ஓ அபிராமி எங்களை மரியாதைக் குறைவாக நடத்தினார் என்பதாலேயே ஆட்சியர் வரும் வரை உள்ளிருப்பு போராட்டத்தை துவக்கினோம். பின்னர் வருவாய் கோட்டாட்சியர் தவச்செல்வம் வந்து 2 நாட்களில் மீண்டும் உங்களை அழைக்கிறோம் எனச் சொல்லி சுமூகப் பேச்சுவார்த்தை நடத்தியதால் நாங்கள் இப்போது அரங்கத்தை விட்டு வெளியேறி இருக்கிறோம்” என்றார்.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“