சென்னை ஐஐடியில் பேராசிரியர்கள் துன்புறுத்தியதாக தற்கொலை செய்துகொண்ட மாணவி ஃபாத்திமாவின் பெற்றோர்கள் இன்று கேரளாவில் இருந்து சென்னை வந்து தமிழக முதலமைச்சர் பழனிசாமியை சந்திக்கின்றனர். மாணவி ஃபாத்திமா தற்கொலை தொடர்பாக, விசாரணை முடியும் வரை வதந்திகளை பரப்ப வேண்டாம் என ஐஐடி நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
சென்னை ஐஐடியில் படித்துவந்த கேரளாவைச் சேர்ந்த மாணவி ஃபாத்திமா புதன்கிழமை ஐஐடியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் தனது தற்கொலைக்கு பேராசிரியர்களின் மத ரீதியான துன்புறுத்தல் காரணம் என தனது செல் போனில் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியானதால் மாணவர்கள், மாணவர் அமைப்புகள், அரசியல் கட்சிகள் போராட்டத்தில் குதித்தனர். இதனால், சென்னை ஐஐடி வளாகத்தின் முன்புள்ள இடம் போராட்டக் களமானது.
உயர்க்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சாதி மத ரீதியான பாகுபாடு காரணமாக தற்கொலை கொள்ளும் நிகழ்ச்சிகள் நடைபெற்றுவருகிறது இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாணவி ஃபாத்திமா லத்தீஃபின் மரணத்திற்கு நீதிவேண்டும் எனவும் மாணவர்கள் அமைப்புகள், திமுக, காங்கிரஸ், கட்சியின் மாணவர் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் கட்சியின் மாணவர் அணி ஆர்ப்பாட்டம்
காங்கிரஸ் கட்சியின் காங்கிரஸ் மாணவர் அணியினர், மாணவி ஃபாத்திமா லத்தீஃபின் மரணத்திற்கு நீதி கேட்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், சென்னை ஐஐடி வளாகம் முன்பு போராட்டக் களமாக மாறியது.
திமுக மாணவர் அணியினர் ஆர்ப்பாட்டம்
அதே போல, திமுகவின் மாணவர் அணியினர் ஃபாத்திமா மரணத்திற்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஐஐடி நிறுவனங்களில் சாதி மத ரீதியான பாகுபாடுகளை ஒழிக்க வேண்டும், மாணவியின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்தனர்.
இதனிடையே, மாணவி ஃபாத்திமாவின் தற்கொலை தொடர்பாக மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர். மேலும், மாணவியின் தற்கொலையில் குற்றம் சாட்டப்படும் 3 பேராசிரியகளிடமும் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து, சென்னை ஐஐடி நிர்வாகம் மாணவி ஃபாத்திமா தற்கொலை விவகாரத்தில் விசாரணைகு உரிய ஒத்துழைப்பு வழங்கப்படுவதாக அறிக்கை வெளியிட்டது. மேலும், மாணவி தற்கொலை விவகாரத்தில் முழுமையான விசாரணை முடியும் வரை யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் என ஐஐடி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
தற்கொலை செய்துகொண்ட மாணவி ஃபாத்திமா லத்தீஃபின் தந்தை அபுதுல் லத்தீஃப் கேரளாவில் இருந்து சென்னை வந்தனர். பின்னர், தமிழக டிஜிபியை சந்தித்து புகார் அளித்தார். புகார் அளித்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், “
என்னுடைய மகள் தினமும் என்னுடன் பேசுவார்; அன்று பேசவில்லை. அவருடைய மனதில் இருந்த கலக்கத்தையும் சொல்லவில்லை. சம்பவங்களை பார்க்கும்போது இது தற்கொலை மாதிரி தெரியவில்லை. என்னுடைய மகள் எதையும் கடிதம் எழுதிவைத்துவிட்டுதான் செய்வார். அதனால், இதுதொடர்பாக கடிதம் எழுதி வைத்திருப்பார். அல்லது செல்போனில் இது தொடர்பாக பதிவு செய்து வைத்திருப்பார்.
படிப்பிலும் எல்லாவற்றிலும் சிறப்பாக செயல்பட்ட எனது மகள். எனது மகள் பேராசிரியர் சுதர்சனன் பத்மநாபன் பற்றி மோசமானவர் என்று என்னிடம் சொல்லியிருக்கிறார்.
ஃபாத்திமா மரணத்துக்கு பேராசிரியர் சுதர்சனன் பத்மநாபனே காரணம். எனது மகள் கயிறில் தூக்கிட்டு இறந்துள்ளார். அறையிலும் விடுதியிலும் கயிறு இல்லாதபோது எப்படி அங்கே கயிறு வந்தது. எப்படி அவருக்கு கயிறு கிடைத்தது என்று தெரியவில்லை. இது தற்கொலை போல தெரியவில்லை. தற்கொலையாக இருந்தால் அதற்கான காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனது மகள் தற்கொலைக்கு காரணம் பேராசிரியர் சுதர்சனன் பத்மநாபன் காரணம் என்று போனில் எழுதிய குறிப்பு உள்ளது. அந்த போன் எங்களுடைய முன்னிலையில் அன்லாக் செய்ய வேண்டும்.
எனது மகள் தற்கொலை விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று நாங்கள் தமிழக முதல்வரையும் டிஜிபியையும் மிகவும் நம்பியிருக்கிறோம்” என்று கூறினார்
இதையடுத்து அப்துல் லத்தீஃப் தனது மகள் ஃபாத்திமா தற்கொலை விவாகாரத்தில் உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்க கோரி முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்து முறையிட்டார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஃபாத்திமாவின் மரணத்திற்கு காரணமான குற்றவாளிகளை கண்டுபிடித்து உரிய தண்டனை வழங்கப்படும் என முதல்வர் உறுதி அளித்துள்ளார்” என்று கூறினார்.