நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு கடந்த ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி பயணிகள் கப்பல் சேவையை பிரதமர் நரேந்திரமோடி காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். 'செரியபாணி' என்ற பெயர் கொண்ட இந்த கப்பல் இலங்கைக்கு சென்று வந்த நிலையில், இயற்கை சீற்றம் காரணமாக அக்டோபர் 20-ம் தேதி முதல் நிறுத்தப்பட்டது. மீண்டும் கப்பல் சேவையை தொடங்க பயணிகள் பலர் வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து தற்போது வேறொரு தனியார் நிறுவனத்திடம் கப்பல் சேவை ஒப்படைக்கப்பட்டு 'சிவகங்கா' என்ற பெயர் கொண்ட கப்பல் அந்தமானில் இருந்து வரவழைக்கப்பட்டு நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு கடந்த 13ஆம் தேதி முதல் இயக்கப்படும் என கப்பல் இயக்க உரிமம் பெற்றுள்ள இன்ட்ஸ்ரீ நிறுவனம் அறிவித்தது.
இதனால் பயணிகள் ஆர்வமுடன் இலங்கை செல்ல முன்பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் திடீரென கப்பல் சேவை வரும் 17ஆம் தேதிக்கு (நேற்று) மாற்றப்படுவதாக கடந்த 12ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இலங்கை செல்ல 150-க்கும் மேற்பட்ட பயணிகள் முன்பதிவு செய்து காத்திருந்தனர். இந்நிலையில் நேற்று திடீரென கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டு, வரும் 19ஆம் தேதியில் (நாளை) இருந்து இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. சில சட்டரீதியான அனுமதி கிடைக்காத காரணத்தால் கப்பல் சேவை வரும் 19ஆம் தேதிக்கு மாற்றப்படுவதாக அந்த கப்பலை இயக்கும் இன்ட்ஸ்ரீ நிறுவனம் தெரிவித்தது.
இந்நிலையில், நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து சேவை நாளை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் 3-வது முறையாக நாகை இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்து ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள், கட்டணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என இன்ட்ஸ்ரீ நிறுவனம் அறிவித்துள்ளது முன்பதிவு செய்த பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முன்னதாக, மே 13, 17, 19, தேதிகளில் கப்பல் போக்குவரத்து தொடங்கும் என 3 முறை தேதி அறிவித்தும் கப்பலை இயக்க முடியவில்லை என கப்பலை இயக்கும் தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்திய எல்லைக்குள் இயக்கும் அனுமதி மட்டுமே பெற்றிருந்த சிவகங்கா கப்பலுக்கு வணிக கடல் துறையின் சர்வதேச பதிவு எண் கிடைக்காத காரணத்தால் கப்பல் போக்குவரத்து சேவை ஒத்தி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சிக்கல்களால் தொடர்ந்து கப்பல் இயக்கம் தேதி தள்ளி போவதால் டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகளிடம் வருத்தம் தெரிவித்து தனியார் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இலங்கை அமைச்சா் நிமல் ஸ்ரீபால் டி சில்வா தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசியபோது, 'நாகை - இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து தற்போது சாத்தியமில்லை' என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“