ஜி.எஸ்.டி வரி விதிப்பு பிரதமர் மோடி மக்களுக்கு தனியாக வரி விதிப்பது போல் பேசப்படுகிறது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நேற்று (மே 1) தனது எக்ஸ் தளத்தில், ஏப்ரல் 2025-ம் ஆண்டுக்கான நிகர ஜிஎஸ்டி வசூல் ரூ.2.09 லட்சம் கோடியை எட்டியுள்ளது, இது ஏப்ரல் 2024-ன் நிகர வசூலான ரூ.1.92 லட்சம் கோடியுடன் ஒப்பிடும்போது 9.1 சதவீத வளர்ச்சியை காட்டுகிறது. ஜிஎஸ்டி கட்டமைப்பில் பங்களிப்பும் நம்பிக்கையும் கொண்டு வரி செலுத்துவோருக்கு மிக்க நன்றி. அவர்களின் பங்களிப்புகள் ஒரு சிறந்த பாரதத்தை கட்டியெழுப்புவதற்கான பகிரப்பட்ட அர்ப்பணிப்பை பிரதிபலிக்கின்றன" என்று கூறியிருந்தார்.
நிர்மலா சீதாராமனின் இந்த பதிவு இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், நெட்டிசன்கள் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்திருந்தனர். இதனிடையே சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி வரி - மோடி தனியாக மக்களுக்கு வரி விதிப்பது போல் பேசப்படுகிறது என்று கூறியுள்ளார். ஜிஎஸ்டி வரியால் நடுத்தர மக்கள் பாதிப்பு என்பது தவறு. முன்பு இருந்த வரியே தற்போது ஜிஎஸ்டி-யிலும் உள்ளது.
ஜிஎஸ்டி வரிகக்கு பிறகு தான் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தினமும் பயன்படுத்தும் பொருள் மீது வரி விதிக்கப்படுகிறது என கூறுவது தவறு. ஜிஎஸ்டி.,க்கு முன்பு இருந்ததை விட தற்போது வரி குறைந்துள்ளது. ஜிஎஸ்டி விவகாரத்தில் என்னால் தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது. ஒவ்வொரு மாநில நிதி அமைச்சர்கள் ஜிஎஸ்டி கவுன்சிலில் பிரதிநிதிகளாக இருக்கிறார்கள். அனைவருடைய கருத்துக்கள் அடிப்படையில் தான் முடிவுகள் எடுக்கப்படுகின்றன.
சாதி ரீதியான பிரச்சினை தமிழகத்தில் இன்றும் உள்ளது. மற்ற மாநிலங்களில் இல்லாத சாதி கொடுமை தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. தமிழகத்தில் இன்றும் ஜாதி பெயருடன் பலகைகளை பார்க்கிறேன். குடிநீரில் மனித கழிவு கலப்பது தமிழகத்தில் தான் நடந்தது. வட மாநிலங்களில் நடக்கவில்லை. தமிழ்நாட்டில் அரசு சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு திமுகவின் வெற்றி என்று கூறுவது அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி என்று கூறியுள்ளார்.