அதிக வட்டி தருவதாக கூறி முதலீட்டாளர்களிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்த வழக்கில் விஸ்வபிரியா நிதி நிறுவனத்தின் இயக்குநர் சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் நேற்று(நவ.20) தீர்ப்பளித்தது.
சென்னை அடையாறு பகுதியில் ‘விஸ்வபிரியா பைனான்ஸ் சர்வீஸ் மற்றும் செக்யூரிட்டு பிரைவேட் லிமிடெட்’ என்ற நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வந்தது. தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 11%-க்கும் மேல் வட்டி தருவதாக கூறியது. இதை நம்பி, பல பேர் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர்.
ஆனால் அந்த நிறுவனம் கூறியபடி வட்டி வழங்கவில்லை. மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த ராமதாஸ் என்பவர் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் இதுகுறித்து கடந்த 2013-ம் ஆண்டு புகார் அளித்தார்.
புகாரின் பேரில், விஸ்வபிரியா பைனான்ஸ் சர்வீஸ் மற்றும் செக்யூரிட்டி பிரைவேட் லிமிடெட் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் என 17 நிறுவனங்களின் இயக்குநர்கள் சுபிக்ஷா சுப்பிரமணியன், ஸ்ரீவித்யா, நாராயணன், ராஜரத்தினம், பாலசுப்பிரமணியன், அகஸ்டின், கணேஷ் உள்பட 17 பேர் மீது மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, காவல்துறைகடந்த 2020-ம் ஆண்டு நீதிமன்றத்தில் இந்த நிறுவனங்களுக்கு எதிராக குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தது. வழக்கு விசாரணையின் போது இயக்குநர்கள் நாராயணன், ராஜரத்தினம், ராமசாமி ஆகியோர் உயிரிழந்தனர். தலைமறைவான அப்பாதுரை, இந்த வழக்கில் தேடப்படும் குற்றவாளி என சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது.
வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர்கள் டி.பாபு, எம்.இ.வி.துளசி ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி.கருணாநிதி, இந்த வழக்கின் தீர்ப்பை நேற்று (நவ.20) பிறப்பித்தார்.
அதில், ''இயக்குனர் சுபிக்ஷா சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கிறேன். இயக்குனர் ஸ்ரீவித்யாவுக்கு 4 ஆண்டுகளும், மற்ற இயக்குனர்கள், ஊழியர்களுக்கு தலா 10 ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. இவர்களுக்கு மொத்தம் 191 கோடியே 98 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கிறேன். இந்த தொகையில், ரூ.180 கோடியை பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு வழங்க வேண்டும். இயக்குனர்கள் ராகவன், மோகன் ராமசாமி ஆகியோரை வழக்கில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 3 பேர் இறந்து விட்டதால், அவர்கள் மீதான வழக்கு கைவிடப்படுகிறது." என்று கூறி தீர்ப்பு வழங்கினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“