/tamil-ie/media/media_files/uploads/2018/04/A2.jpg)
எஸ்.வி.சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நடிகரும், பாஜகவைச் சேர்ந்தவருமான எஸ்.வி,சேகர் பெண் செய்தியாளர்கள் குறித்து தரம் தாழ்ந்த கருத்தை பதிவிட்டு இருந்தார். இதற்கு பத்திரிக்கையாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, எஸ்.வி.சேகர் நேற்று அறிக்கை மூலம் மன்னிப்பு கோரி இருந்தார். இன்றும் வீடியோ மூலமாக அவர் பொதுமக்களிடம் மன்னிப்பு கோரினார். அதில், 'நான் தவறுதலாகவே மற்றொருவரின் பதிவை படிக்காமல் ஷேர் செய்துவிட்டேன். பொதுவெளியில் ஒருவரை தரம் தாழ்ந்து விமர்சித்து அரசியல் செய்ய வேண்டிய நிலையில் நான் இல்லை. நான் என்றும் அதை ஆதரிக்கவும் மாட்டேன்' என்றார்.
இருப்பினும், தொடர்ந்து அவருக்கு எதிர்ப்புகள் வலுத்துக் கொண்டே உள்ளன. அதன் பிரதிபலிப்பாக, நேற்றைய தினம் அவருடைய வீட்டின் மீது கல் வீசித் தாக்கப்பட்டது. இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், எஸ்.வி.சேகர் மீது புகார் அளித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அதுமட்டுமின்றி, எஸ்.வி.சேகரின் கருத்தை கடுமையாக எதிர்த்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், "எஸ்.வி.சேகர் பத்திரிகையாளர்கள் குறித்து எழுதியது மிகப்பெரும் தவறு. என்னைப் பொறுத்தவரை அது மன்னிக்க முடியாத குற்றம். பெண்களைப் பற்றி என்ன வேண்டுமானாலும் எழுதிவிட்டு பின் மன்னிப்புக் கேட்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்க முயற்சி செய்துக் கொண்டிருக்கின்றேன்" என்றார்.
இந்த நிலையில், எஸ்.வி.சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். பத்திரிகையாளர் பாதுகாப்பு நலச்சங்கம் அளித்த புகாரில், எஸ்.வி. சேகர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உட்பட 4 பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.