திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.என்.நேரு பணப்பட்டுவாடா செய்வது குறித்தும் ஆபாசமாக பேசியதாகவும் தேர்தல் அலுவலர்கள் புகார் அளித்ததைத் தொடர்ந்து, அவர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சரும் திமுகவின் தலைமை நிலைய முதன்மை செயலாளருமான கே.என்.நேரு திருச்சி மேற்கு தொகுதியில் திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிடுகிறார். திருச்சி தில்லைநகர் காவல்நிலையத்தில் காவலர்கள் திமுகவுக்கு தபால் வாக்கு அளிப்பதற்காக அவர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதோடு, 6 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். காவலர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீசுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு, திமுக வேட்பாளர் கே.என்.நேரு தன்னுடைய ஆதரவாளர்களுடன் பணப்பட்டுவாடா செய்வது குறித்து பேசிய வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோவில் அவர் சில கெட்ட வார்த்தைகளையும் பேசி இருந்தார்.
அந்த வீடியோவில், திமுக பிரமுகவர் ஒருவர் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு 500 ரூபாய் கொடுப்பதாக நேருவிடம் கூற அதற்கு நேரு, அவங்க கொடுத்தா கொடுத்துவிட்டு போகட்டும். அவர்கள் கொடுக்கும் 500 ரூபாய் முழுமையாக சென்று சேராது. அதனால், 200 ரூபாய் கொடு போதும் என்று கூறுகிறார்.
மேலும், அதிமுக 500 ரூபாய் கொடுப்பதால் நாமும் 500 ரூபாய் கோடுப்போம் என நம்ம ஆளுங்க சொல்கிறார்கள் என்று சொல்லும் திமுக தொண்டரை ஆபாசமான வார்த்தைகளால் பேசுகிற நேரு பணம் கொடுப்பதில் ஏதாவது பிரச்னை வந்தால் அடித்து மண்டையை உடைத்துவிடுவேன் என்று கூறுகிறார்.
கே.என்.நேரு இப்படி பேசுவதை அந்த இடத்தில் இருந்த நபர் வீடியோ பதிவு செய்து அதனை சமூக ஊடகங்களில் பகிர்ந்ததால் அந்த வீடியோ வைரலானது. இதனைட் தொடர்ந்து, தேர்தல் அதிகாரிகள், திமுக வேட்பாளர் கே.என்.நேரு மீது முசிறி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனைத்தொடர்ந்து, முசிறி காவல் நிலைய போலீசார் கே.என்.நேரு மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்க உள்ள நிலையில், திமுக வேட்பாளர் கே.என்.நேரு ஆபாசமாக பேசியதாக தேர்தல் அதிகாரிகள் புகார் அளித்ததைத் தொடர்ந்து, அவர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.