திண்டுக்கல் சிட்டி மருத்துவமனையில் படுகாயம் அடைந்த என்.ஜி.ஓ காலனியைச் சேர்ந்த ராஜசேகர் மனைவி பாலபவித்ரா(29) என்பவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தீ விபத்தில் ஏற்கெனவே 6 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
திண்டுக்கல் சிட்டி மருத்துவமனையில் டிசம்பர் 12- தேதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டு பாலதிருப்பதி நகரைச் சேர்ந்த மணிமுருகன், மாரியம்மாள், தேனி மாவட்டத்தை சேர்ந்த சேர்ந்த சுருளி, சுப்புலட்சுமி, திண்டுக்கல் என்.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்த ராஜசேகர், கோபிகா ஆகியோர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், இந்த தீ விபத்தில் படுகாயம் அடைந்த என்.ஜி.ஓ காலனியைச் சேர்ந்த ராஜசேகர் மனைவி பாலபவித்ரா(29) என்பவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
மேற்படி, சம்பவம் குறித்து தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த தீ விபத்தில், உயிரிழந்த ராஜசேகரின் மனைவி மற்றும் கோபிகாவின் அம்மா என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தீ விபத்தில் இறந்திருப்பது அப்பகுதி மக்களிடையே மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“