/indian-express-tamil/media/media_files/4EKZLUAUtDufV2u9JEZ7.jpg)
திருச்சி என்.ஐ.டி தொழில்நுட்பக் கல்லூரிக்கு எதிரே சிட்கோ பகுதியில் அமைந்துள்ளது எஸ்.பி.ஐ வங்கி. இந்த வங்கியில் சிட்கோவில் உள்ள சிறு குறு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மட்டுமின்றி அப்பகுதி பொதுமக்களும் சேமிப்பு கணக்குகள் வைத்துள்ளனர். எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் வங்கிக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை வங்கிக்குள் இருந்து புகை வருவதை கண்ட பாதுகாவலர் உடனடியாக வங்கி மேலாளர் மற்றும் திருவெறும்பூர், நவல்பட்டு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.
மேலும் துவாக்குடி போலீசாருக்கும் உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து திருவெறும்பூர், பெல், நவல்பட்டு ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை போராடி அணைத்தனர். இதில் வங்கியிலிருந்த அனைத்து கம்ப்யூட்டர்களும், பெரும்பான்மையான டாக்குமெண்ட்டுகளும் எரிந்து சேதமாகிவிட்டது.
இதுகுறித்து வங்கி மேலாளர் பிரசாந்த் தெரிவிக்கையில், "மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று நினைக்கின்றோம். சேதாரத்தின் மதிப்பு குறித்து மேலதிகாரிகள் பார்வையிட்ட பின் கணக்கீடு செய்த பின்தான் சொல்ல முடியும். வங்கியில் அடகு வைக்கப்பட்டிருக்கும் பொருட்களுக்கு எந்த சேதாரமும் ஏற்பட வாய்ப்பில்லை" என்றார்.
வங்கியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து அப்பகுதியில் உள்ள மக்களுக்கு தெரிய வரவும் ஒவ்வொருத்தரும் தங்களது கணக்கின் நிலை, தாங்கள் அடகு வைத்திருக்கும் தங்கத்தின் நிலையை தெரிந்துகொள்ள வங்கி முன் அச்சத்துடன் குவிந்தனர். போலீசார் அவர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.