ஆள் கடத்தல் வழக்கில் உயர் நீதிமன்ற வளாகத்திலேயே சீருடையில் இருந்த ஐ.பி.எஸ் அதிகாரி முதல் முறையாக கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பாரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆள் கடத்தல் வழக்கில், ஏ.டி.ஜி.பி வாகனத்தில் 17 வயது சிறுவன் கடத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், உயர் நீதிமன்ற வளாகத்திலேயே ஏ.டி.ஜி.பி ஜெயராம் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழக வரலாற்றில் சீருடையில் இருந்த ஐ.பி.எஸ் அதிகாரியான ஏ.டி.ஜி.பி ஜெயராம் கைது செய்யப்பட்டிருப்பது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுவன் கடத்தல் வழக்கில் செய்யப்பட்டிருக்கும் ஏ.டி.ஜி.பி ஜெயராம் யார், இவருடைய பின்னணி என்ன என்று விரிவாகப் பார்ப்போம்.
ஏ.டி.ஜி.பி ஜெயராம் கர்நாடக மாநிலம் ராம் நகரைச் சேர்ந்தவர், கன்னட மொழியில் முதுகலை பட்டமும் வரலாற்று பாடத்தில் எம்.பில் மற்றும் டாக்டர் பட்டமும் பெற்றுள்ளார். கர்நாடகா அரசின் குரூப் பி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஜெயராம், ஐபிஎஸ் கனவுடன் தனது 34 வது வயதில் யூ.பி.எஸ்.சி தேர்வு எழுதி வெற்றி பெற்று, தமிழ்நாடு பிரிவு ஐ.பி.எஸ் அதிகாரி ஆனார்.
தமிழ்நாடு காவல்துறையில் 1996-ம் ஆண்டு ஐ.பி.எஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்த ஜெயராம் கோவை குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு பிறகு கோவை ஏ.எஸ்.பி யாகவும், பின்னர் நாமக்கல் தர்மபுரி மாவட்டங்களில் எஸ்.பி ஆகவும் பணிபுரித்துள்ளார். இதைத்தொடர்ந்து, டி.ஐ.ஜி-யாக பதவி உயர்வு பெற்ற ஜெயராம், வேலூர், தஞ்சாவூர், கோவை சரக்கங்களை பணியாற்றினார். சென்னை வடக்கு இணை ஆணையராகவும் பணியாற்றிய ஜெயராம், அதன் பின்பு ஐ.ஜி-யாக பதவி உயர்வு பெற்ற மேற்கு மண்டலம் மத்திய மண்டலங்களிலும் அதன் பிறகு ஏ.டி.ஜி.பி-யாக பதவி உயர்வு பெற்று தமிழ்நாடு காவல்துறையின் ஆபரேஷன், குற்ற ஆவண காப்பகங்களில் பணிபுரிந்தார். தற்போது ஆயுதப்படை ஏ.டி.ஜி.பி-ஆக பணிபுரிந்து வரும் இவர் அடுத்த ஆண்டு மே மாதத்துடன் ஓய்வு பெற உள்ள நிலையில் சிறுவன் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
காதல் திருமண விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் ஏ.டி.ஜி.பி ஜெயராம் கைது செய்யப்பட்டுள்ளார். கடத்தப்பட்ட சிறுவன் ஏ.டி.ஜி.பி ஜெயராமின் காரில் கொண்டு வந்து விடப்பட்டிருக்கிறார் என்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்திலிருந்து 7 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது, ஏ.டி.ஜி.பி-யை கைது செய்து சிறையில் அடையுங்கள் என கூறிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, அரசு அதிகாரிகள் தவறு செய்தால் என்ன ஆகும் என்ற செய்தியை சொல்ல வேண்டும் என்றும் எம்.எல்.ஏ-வையும் போலீசாரையும் சமமாக கருத முடியாது, போலீஸ் அதிகாரியை மக்கள் நியமிக்கவில்லை என்றும் நீதிபதி கூறினார். இதையடுத்து, நீதிபதி உத்தரவுபடி நீதிமன்ற வளாகத்திலேயே ஏ.டி.ஜி.பி ஜெயராமை போலீசார் கைது செய்தனர்.
முன்னதாக, சிறுவன் கடத்தல் வழக்கில், புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தியை கடுமையாக சாடிய சென்னை உயர்நீதிமன்றம், அவரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பியது.
திருவள்ளூர் மாவட்டம், கலாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் தேனியை சேர்ந்த பெண்ணை காதலித்து பதிவு திருமணம் செய்துள்ளார். இதில் பெண் வீட்டாருக்கு ஆதரவாக கூலிப்படையினர் மூலம் இளைஞரின் சகோதரரான சிறுவனை கடத்தியதாக புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
வழக்கு தொடர்பாக பெண்ணின் தந்தை உள்ளிட்டோர் கைதான நிலையில் முன்ஜாமின் கோரி பூவை ஜெகன் மூர்த்தி தாக்கல் செய்த மனு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பூவை ஜெகன் மூர்த்தியுடன் ஏராளமானோர் நீதிமன்றத்திற்கு வருகை தந்த நிலையில் நீதிமன்றம் ஒன்றும் படப்பிடிப்பு தளம் அல்ல என்று காட்டமாக கூறிய நீதிபதி தேவையில்லாத நபர்கள் நீதிமன்ற அறையை விட்டு வெளியேற உத்தரவிட்டார். நீங்கள் எந்த தொகுதி எம்.எல்.ஏ எத்தனை வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றீர்கள் என்று ஜெகன் மூர்த்தியிடம் சரமாரியாக கேள்வி எழுப்பிய நீதிபதி கட்டப்பஞ்சாயத்து நடத்த தான் மக்கள் வாக்களித்தனரா, வாக்களித்த மக்களுக்கு மரியாதை கொடுக்கும் வகையில் விசாரணைக்கு ஒத்துழைக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும், யாராக இருந்தாலும் வாக்களித்த மக்களை ஏமாற்ற கூடாது என்றும் கூறினார். மக்கள் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டுமே தவிர கட்டப்பஞ்சாயத்து செய்ய யார் அதிகாரம் கொடுத்தது என கேள்வி எழுப்பிய நீதிபதி, பதவியைத் தவறாக பயன்படுத்தினால் வேடிக்கை பார்க்க முடியாது. உங்களுக்கு வாக்களித்த மக்களுக்காக தான் உங்களை கைது செய்ய உத்தரவிடவில்லை என கூறினார். மேலும், பூவை ஜெகன் மூர்த்தியின் முன் ஜாமீன் மீதான விசாரணையை ஜூன் 26-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
இதனிடையே, சிறுவன் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள்ள ஏ.டி.ஜி.பி ஜெயராம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.