தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடைப்பிடிக்கப்படும் மீன்பிடி தடை காலம் இன்று முதல் துவங்கியது. இதனால் விசைப்படகுகள் கடலுக்கு செல்ல 2 மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடலில் வாழும் மீன்கள் மற்றும் பிற கடல்வாழ் உயிரினங்கள் இனவிருத்தி செய்யும் காலத்தில் மீன் பிடிப்பது அவற்றின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும். எனவே இனவிருத்தி காலத்தில் கடலில் மீன் பிடிப்பதற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை காலம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதனால் 7 ஆயிரம் விசைப்படகுகள், 50 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இன்னும் இரண்டு மாதங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்துப் படகுகளும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இன்று துவங்கியுள்ள இந்தத் தடை காலம் வரும் ஜூன் 14ம் தேதி வரை நீடிக்கும். எனவே இன்று முதல் தடை காலம் முடியும் வரை கடல் வாழ் உணவுப் பொருட்களின் விலை உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.