மதுரை விமான நிலையத்திலிருந்து நேரடி உள்ளூர் சேவையாக சென்னை – ஐதராபாத், பெங்களூரு, டெல்லி, மும்பை, விஜயவாடா உள்ளிட்ட நகரங்களுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் வெளிநாட்டு சேவையாக துபாய், கொழும்பு நகரங்களுக்கு நேரடி சேவையும், மலேசியாவின் பினாங்கு நகருக்கு சென்னை வழியாகவும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. மதுரை விமான நிலையம் சுங்கத்துறையுடன் கூடிய துஎன்பதால் இங்கிருந்து வெளிநாட்டு சேவையாக பல வெளிநாட்டு நகரகளுக்கு விமானம் இயக்க தொடர்ந்து தென் தமிழக மக்களால் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மதுரை விமான நிலையத்திலிருந்து அபுதாபிக்கு இண்டிகோ நிறுவனத்தின் புதிய நேரடி விமான சேவை 13-ம் தேதி முதல் இயக்கத்துக்கு வந்தது. மதுரையிலிருந்து வாரத்தில் 3 நாட்கள் (திங்கள், புதன், வெள்ளி) மதியம் 2.35க்கு புறப்படும் விமானம் அபுதாபிக்கு அந்நாட்டு நேரப்படி மாலை 5.20க்கு சென்றடையும். அதே போல் அபுதாபியிலிருந்து அந்நாட்டு நேரப்படி காலை 7.20க்கு புறப்படும் விமானம் மதுரை விமான நிலையத்திற்கு மதியம் 1.50 மணிக்கு வந்து சேரும். மொத்த பயண நேரம் 4 மணி 15 நிமிடம். நேற்று அபுதாபியில் இருந்து கிளம்பி மதுரைக்கு வந்த முதல் விமானத்தில் 134 பயணிகள் வந்தனர். மதுரையிலிருந்து அபுதாபிக்கு 174 பயணிகள் புறப்பட்டுச் சென்றனர்.
வழக்கமாக புதிய விமான சேவைகளை வரவேற்க “வாட்டர் சால்யூட்” நிகழ்ச்சி நடை பெறும். எனினும், சமீபத்தில் அகமதாபாத்தில் நிகழ்ந்த விமான விபத்து காரணமாக, மதுரை விமான நிலையத்தில் எந்தவித வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெறவில்லை. விமானம் புறப்படுவதற்கு முன்பு விமானக் கேப்டன் இமானுவேல் பயணிகளிடம் பேசினார். அப்போது, “நம்ம ஊரு ஃப்லைட்-ன்னு ஜிகர்தண்டா, பருத்திப்பால் கேட்டுடாதீங்க!” என நகைச்சுவையுடன் கேட்டுக்கொண்டார். இது பயணிகளை மகிழ்ச்சிக்குள்ளாக்கியது.
விமான நிலைய அதிகாரிகள் மேலும் தெரிவித்ததாவது, பயணிகளின் வரவேற்பு மற்றும் தேவைகளை கருத்தில் கொண்டு சேவைகளை விரிவுப்படுத்தும் திட்டம் உள்ளதாகவும், இந்த புதிய சேவை மதுரை விமான நிலைய வளர்ச்சியின் ஒரு முக்கிய படியாகும் எனவும் கூறினர்.