மிக்ஜாம் புயலால் பாதிப்புக்குள்ளான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில், எந்தெந்த வட்டங்களில் யார் யாருக்கெல்லாம் வெள்ள நிவாரணம் வழங்கப்படுகிறது என்பது குறித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மிக்ஜாம் புயலால் பாதிப்புக்குள்ளான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில், எந்தெந்த வட்டங்களில், யார் யாருக்கெல்லாம் வெள்ள நிவாரணம் வழங்கப்படுகிறது என்பது குறித்து தமிழ்நாடு அரசு அரசாணை புதன்கிழமை வெளியிட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக டிசம்பர் 3, 4 தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் அதி கனமழை பெய்தது. இதனால், சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்ததால் மக்களின் உடைமைகள், சேதம் அடைந்தன. தமிழக அரசு போர்க்கால அடிப்படையில், மீட்பு பணிகளையும் நிவாரணப் பணிகளையும் மேற்கொண்டது.
தமிழகத்தில் வெள்ள சேதங்களை ஆய்வு செய்ய மத்தியக் குழு நேற்று முன் தினம் சென்னை வந்து பல்வேறு இடங்களுக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தது.
முன்னதாக, மிக்ஜாம் புயல், வெள்ள நிவாரணமாக தமிழக முதலமைசர் மு.க. ஸ்டாலின் முதற்கட்டமாக 5 ஆயிரத்து 60 கோடி ரூபாய் இடைக்கால நிவாரணமாக வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கேட்டிருந்தார். இதற்கு, மத்திய அரசு, மாநில அரசுக்கு பேரிடர் நிவாரண நிதியாக முதற்கட்ட இடைக்கால நிவாரண நிதியாக 450 கோடி ரூபாய் அளிப்பதாக அறிவித்தது.
இதைத் தொடர்ந்து, மிக்ஜாம் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் தமிழக அரசு ரூ. 6,000 நிவாரண நிதியாக வழங்கும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி, மிக்ஜாம் புயலால் பாதிப்புக்குள்ளான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில், நிவாரணம் வழங்கப்படும் வட்டங்களை அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னை மாவட்டம்
சென்னை மாவட்டத்தில், அனைத்து வட்டங்களுக்கும் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம்
செங்கல்பட்டு மாவட்டத்தில், தாம்பரம், பல்லாவரம், வண்டலூர், திருப்போரூர் (3 வருவாய் கிராமங்கள்) ஆகிய வட்டங்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில், குன்றத்தூர், ஸ்ரீபெரும்பூது (3 வருவாய் கிராமங்கள் வட்டங்களில் வெள்ள நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம்
திருவள்ளூர் மாவட்டத்தில், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூவிருந்தவல்லி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் ஆகிய வட்டங்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட, 2 நாட்களுக்கு மேல் மழை வெள்ளம் சூழ்ந்து துணிமணிகள், பாத்திரங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் இழந்த குடும்பங்களுக்கு சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடைகள் மூலம் ரூ. 6,000 நிவாரணம் வழங்குவதற்கான டோக்கன்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் மற்றும் அதிகனமழை காரணமாக சில பகுதிகளில் ஏ.டி.எம் மையங்கள் இயங்காததாலும், பயனாளர்களின் வங்கிக் கணக்கு எண்களை சேகரித்து நிவாரணம் வழங்க காலதாமதம் ஆகும் என்பதாலும் நிவாரண நிதி ரொக்கமாக வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட பலர் தங்களது ஏடிஎம் அட்டை, வங்கிக் கணக்கு விவரங்கள் ஆகியவற்றை இழந்திருக்கக் கூடும் என்பதாலும், அவர்களுக்கு உடனடியாக பயனளிக்கும் வகையில் நிவாரணத் தொகை ரொக்கமாக வழங்கலாம் என ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையர் மற்றும் மாநில நிவாரண ஆணையர் அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, வெள்ள நிவாரணத் தொகையை சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடைகள் மூலமாக ரொக்கமாக வழங்கப்படலாம் என்றும், நெரிசலைக் குறைக்கும் வகையில் டோக்கன்களை முன்னதாகவே கூட்டுறவுத் துறை மூலம் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், சர்க்கரை அட்டை மற்றும் வரி செலுத்துவோர், அரசுப் பணியில் இருப்போர், தங்களின் பாதிப்பு விவரங்களையும், வங்கி கணக்கு எண் ஆகியவற்றை தெரிவித்து நிவாரணத் தொகையைப் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“