வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியதால் உபரி நீர் திறந்து விடப்படவுள்ள நிலையில், கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம், வீராணம் ஏரியின் நீர்வழித்தடங்களில் ஏற்பட்ட மழைப்பாதிப்புகள் குறித்து லால்பேட்டை பகுதியில் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இன்று (டிச 14) ஆய்வு செய்தார். அப்போது, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
இதைத் தொடர்ந்து, நடந்த செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் கலந்து கொண்டார். அப்போது, "வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு கடலோர மாவட்டங்களில் கடும் மழைப்பொழிவு ஏற்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்ததை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் கூட்டம் நடத்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
அதனடிப்படையில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வீராணம் ஏரி அருகே தாழ்வானப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் நிவாரண முகாம்களுக்கோ அல்லது பாதுகாப்பான இடங்களுக்கோ செல்லுமாறு ஒலிப்பெருக்கியின் வாயிலாக அறிவிக்கப்பட்டது.
வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த இரண்டு நாட்களாக (12.12.2024 மற்றும் 13.12.2024) வீராணம் ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளான காட்டுமன்னார்கோயில், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், ஸ்ரீமுஷ்ணம் உள்ளிட்ட இடங்களில் சுமார் 41 செ.மீ அளவில் கனமழை பெய்துள்ளது. இதன் காரணமாக நீர்வரத்து திடீரென அதிகரித்துள்ளது. ஏற்கனவே, வடகிழக்கு பருவமழை முன்னிட்டு வீராணம் ஏரியிலிருந்து படிப்படியாக நீர் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், தற்போது பெய்த கனமழையின் காரணமாக கூடுதலான தண்ணீர் வந்ததாலும், வீராணம் ஏரியில் அதன் முழுக்கொள்ளவு 47.5 அடியில், நேற்றைய தினம் 46.75 அடி உயரத்திற்கு எட்டியுள்ளது.
இதன் காரணமாக பாதுகாப்பு கருதி வீராணம் ஏரிக்கு அருகிலிருந்த குடியிருப்பு பகுதிகளில் உள்ள பொது மக்களுக்கு 6 முறை அறிவிப்பு வெளியிடப்பட்டு, வி.என்.எஸ் மற்றும் வெள்ளியங்கால் மதகுகளின் வழியாக பாதுகாப்பான முறையில் சிறிது சிறிதாக நீரின் அளவு உயர்த்தப்பட்டு 18,000 கனஅடி வெளியேற்றப்பட்டது.
மேலும், தொடர் மழையிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீராணம் ஏரியானது தினந்தோறும் அலுவலர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, நீரின் அளவு குறைக்கப்பட்டு வருகிறது.
காட்டுமன்னார்கோயில் வட்டம், லால்பேட்டை பகுதியில் முறையான அறிவிப்பு தெரிவிக்கப்பட்டதன் வாயிலாக அனைத்து பொதுமக்களும் வெளியேற்றப்பட்டு, வெள்ளநீர் பாதுகாப்பான முறையில் வெள்ளியங்கால் ஓடை வழியாக வீராணம் ஏரியிலிருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஃபீஞ்சல் மற்றும் தென்பெண்ணையாற்று வெள்ளப்பெருக்கின் காரணமாக சுமார் 3,59,315 ஹெக்டர் விளைநிலங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. மழைநீர் வடிந்த பிறகு சேதங்கள் குறித்து கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்படும்.
வீராணம் ஏரி அருகில் உள்ள பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ள இடங்களில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, 350 குடும்பங்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அங்கு 15,000 நபர்களுக்கு தேவையான உணவு வழங்கப்பட்டது.
மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் உடனடியாக தண்ணீரை வெளியேற்றி, மின்சாரம் மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது" எனக் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.