கர்நாடகாவின் குடகு, சிக்மகளூரு உள்ளிட்ட காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் கபினி, ஹேரங்கி அணைகள் தனது முழுக்கொள்ளளவை எட்டியுள்ளன.
கர்நாடகாவில் கனமழை பெய்து வருவதால் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் தமிழகத்துக்கு விநாடிக்கு 55 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.கர்நாடக மாநிலத்தில் கடந்த இரு மாதங்களாக தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக அரபிக் கடலோர மாவட்டங்களிலும் விடிய விடிய பலத்த மழை பெய்து வருகிறது.
இதனால் கபினியில் இருந்து விநாடிக்கு 45 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதேபோல், கே.ஆர்.எஸ் அணையும் தனது முழுக்கொள்ளளவான 124 புள்ளி 80 அடியில், 121 புள்ளி 42 அடியை எட்டியுள்ளது. மேலும் அணையில் இருந்து எந்த நேரமும் விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறக்க வாய்ப்புள்ளது. இதனால் காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு, மத்திய நீர்வள ஆணையம், கர்நாடக அரசை வலியுறுத்தியுள்ளது.
இதன் காரணமாக, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கும் என்பதால், தமிழகத்தின் காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மேலும், கர்நாடகா - கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து முதற்கட்டமாக 20000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கபினி அணையில் 45,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. எனவே, காவிரி கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் நீர் மட்டம் கிடுகிடு என உயர்வதைக் கண்டு டெல்டா பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். காரணம் இந்நிலை அடுத்த சில நாட்களுக்கு நீடித்தால் விவசாய பாசனத்திற்கு மேட்டூர் அணையினை திறந்து விடும் நல்ல சூழ்நிலை உருவாகி உள்ளது.