/indian-express-tamil/media/media_files/2025/07/18/kodaikanal-falls-2025-07-18-18-56-20.jpg)
கொடைக்கானலில் இருந்து பழநி செல்லும் வழியில் பேத்துப்பாறை அருகே ஓராவி அருவி உள்ளது. ஆண்டு முழுவதும் இந்த அருவியில் தண்ணீர் கொட்டும். பாதுகாப்பற்ற நிலையில் உள்ள இந்த அருவிக்கு சுற்றுலா பயணிகள் ஆபத்தான முறையில் சென்று வருகின்றனர்.
கொடைக்கானல் ஓராவி அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி சுற்றுலாவுக்குச்சென்ற மதுரையைச் சேர்ந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். கொடைக்கானலில் இருந்து பழநி செல்லும் வழியில் பேத்துப்பாறை அருகே ஓராவி அருவி உள்ளது. ஆண்டு முழுவதும் இந்த அருவியில் தண்ணீர் கொட்டும். பாதுகாப்பற்ற நிலையில் உள்ள இந்த அருவிக்கு சுற்றுலா பயணிகள் ஆபத்தான முறையில் சென்று வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மதுரை மாவட்டம் வில்லாபுரம் பகுதியில் இருந்து 9 பேர் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தனர். அனைவரும் ஓராவி அருவிக்குச் சென்றுள்ளனர். அப்போது, ஓராவி அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அருவிப் பகுதியில் ஆபத்தான முறையில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த மதுரை வில்லாபுரம் பகுதியை சேர்ந்த பரத் (25) நீரில் அடித்துச் செல்லப்பட்டார்.
அவரது நண்பர்கள், உள்ளூர் கிராம மக்கள் உதவியுடன் 3 மணி நேரம் போராடி பரத்தின் உடலை மீட்டனர். அங்கு வந்த கொடைக்கானல் போலீஸார் பரத்தின் உடலை, கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அருவிக்குச் சுற்றுலாப் பயணிகள் செல்லும் நேரம், பாதுகாப்பு ஏற்பாடுகள், வெள்ளப்பெருக்குக்கான சரியான காரணம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
கொடைக்கானலில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நீர்நிலைகளில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு குறித்துச் சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
செய்தி: க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.