இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்றதால் நாள் ஒன்றுக்கு 98 பேர் உயிரிழப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் தமிழகம் முதலிடத்தை பெற்றுள்ளது.
கடந்தாண்டு இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்றதாலும், கார்களில் சீட் பெல்ட் அணியாமல் சென்றதாலும் நேரிட்ட விபத்துக்கள் குறித்து காவல் துறை மற்றும் போக்குவரத்து துறை சார்ப்பில் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கையில் தமிழகம் முதலிடத்தை பெற்றிருப்பது வேதனை அளிக்கும் வகையில் உள்ளது.
இதன்படி, கடந்த 2017 ஆம் ஆண்டு இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்றதால் நாள் ஒன்றுக்கு 98 பேர் உயிரிழந்துள்ளனர். அதே போல் கார்களில் சீட் பெல்ட் அணியாமல் சென்றதால் நாள் ஒன்றுக்கு சராசரியாக 79 பேர் உயிரிழந்துள்ளனர்.
செல்போன் பேசியப்படியே வாகனத்தில் சென்றவர்களில் நாள் ஒன்றுக்கு 9 பேர் மரணத்தை தழுவியுள்ளனர். 2017 ஆம் ஆண்டு மட்டும் ஹெல்மெட் அணியாமல் சென்றதால் 36,000 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த அறிக்கையில் தமிழகம் முதலிடத்தை பெற்றுள்ளது.
உத்தரப்பிரதேசம் இரண்டாம் இடத்தையும், மத்திய பிரதேசம் மூன்றாமிடத்தை இடம்பிடித்துள்ளது. அதே போல் காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்றதால் ஏற்பட்ட விபத்துகளில் கர்நாடக மாநிலம் முதலிடத்தை பெற்றுள்ளது.