தர்பூசணியில் நிறத்துக்காகவும் இனிப்பு சுவைக்காகவும் ரசாயனம் கலக்கப்படுவதாக செய்திகள் வெளியான நிலையில், “தர்பூசணியில் ரசாயனம் கலக்கப்படுவதாக வெளியான வதந்திகளை நம்ப வேண்டாம், தர்பூசணி பழங்களை தாராளமாக வாங்கி சாப்பிடலாம்” என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஸ் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் இன்று (03.04.2025) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய உணவு பாதுகாப்புத்துறை தர நிர்ணய அதிகாரி சதீஸ் கூறியதாவது: “சென்னையைப் பொறுத்தவரையில் நான் செய்த ஆய்வுகளில் எந்த தர்பூசணி பழங்களிலும் எந்த நிறம் (செயற்கை நிறம்) வரவில்லை. வந்திருந்தால் உடனடியாக நான் பரிசோதனைக்கு அனுப்பியிருப்பேன். அதில் எந்தவிதமான தயக்கமும் காட்டியிருக்கமாட்டேன். அவர்கள் மீது தவறு இருந்திருந்தால் நாங்கள் நடவடிக்கை எடுத்திருப்போம்.
எல்லா விவசாயிகளும் தர்பூசணியில் ரசாயனம் கலப்பதாக நாங்கள் கூறவே இல்லை.
கூல்டிரிங்ஸில் நடந்த தவறைக் கண்டுபிடித்து நாங்கள் நடவடிக்கை எடுத்திருக்கிறோம். அதனால், உணவு பாதுகாப்பு நிறுவனம் ஆய்வு செய்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. நாங்கள் சென்னையில் ஆய்வு செய்ததில் எல்லா இடங்களிலும் அழுகிப்போன தர்பூசணி பழங்கள், எலி கடித்த பழங்களைத்தான் அப்புறப்படுத்தினோம். அப்போது எங்களுடன் உணவு பாதுகாப்புத்துறை ஆணையரும் பங்கேற்றார். சென்னையில் ஆய்வும் செய்யும்போது எந்த இடத்திலும் தர்பூசணி பழங்களில் கலரிங் இல்லை. அதனால், மக்கள் பயப்படாமல் தர்பூசணி பழங்களை வாங்கி சாப்பிடலாம். ” என்று கூறினார்.
மேலும், “தர்பூசணியில் ரசாயனம் கலக்கப்படுவதாக வெளியான வதந்திகளை நம்ப வேண்டாம், பொதுமக்கள் அச்சப்படாமல் தர்பூசணி பழங்களை தாராளமாக வாங்கி சாப்பிடலாம்.” என்று உணவு பாதுகாப்புத்துறை தர நிர்ணய அதிகாரி சதீஸ் கூறியுள்ளார்.