தவறான சிகிச்சையால் மரணமடைந்த இளம் கால்பந்து வீராங்கனை இறப்பதற்கு முன்பு தனது வாட்ஸ்அப்பில் வெளியிட்ட ஸ்டேட்டஸ் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் 17 வயது மாணவி பிரியா. கால்பந்து வீராங்கனையான இவர், சென்னை ராணி மேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். மேலும் கால்பந்து விளையாட்டில் ஆர்வம் கொண்ட பிரியா தேசிய அளவில் பல போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
தொடர்ந்து கல்லூரியிலும் கால்பந்து பயிற்சி பெற்று வந்த பிரியா, கடந்த சில தினங்களுக்கு முன்பு, பயிற்சியின்போது காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சிகிச்சைக்காக சென்னை கொளத்தூர் மருத்தவமனையில், அனுமதிக்கப்பட்டார். அங்கு தசைப்பிடிப்புக்காக அவருக்கு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது.
ஆனாலும் வலியால் அவதிப்பட்ட பிரியா மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரது கால் அழுகிய நிலையில், இருந்ததால் காலை அகற்ற வேண்டும் என்று கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பிரியாவின் குடும்பத்தினர் மகளின் உயிரை காப்பாற்றி காலை அகற்ற ஒப்புக்கொண்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்து கால் அகற்றப்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரியா இன்று திடீரென மரணமடைந்தார். அவரது உடலில் ஏற்பட்ட திடீர் பின்னடைவு காரணமாக சிறுநீரகம் மற்றும் இதயம் செயலிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறி வரும் நிலையில், தவறான சிகிசசையால் தான் பிரியா உயிரிழந்தாக பலரும் கூறி வருகின்றனர்.
இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இறப்பதற்கு முன் பிரியா வெளியிட்ட வாட்ஸ்அப் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. அந்த பதிவில், அனைத்து நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் நான் சீக்கிரம் ரெடியாகி மீண்டு வருவேன். அதனால் யாரும்கவலைப்படாதீர்கள் நான் மாஸாக வருவேன். எனது விளையாட்டு எப்போதும் என்னைவிட்டு போகாது. நான் வருவேன் என்று நம்பிக்கையோடு காத்திருங்கள் என்று பதிவிட்டுள்ளார்.
இந்த வாட்ஸ்அப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil