சென்னை வியாசப்பாடி பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவியும், கால்பந்து விளையாட்டு வீராங்கனையுமான பிரியா, கடந்த சில நாட்களுக்கு முன் கால் மூட்டு வலி காரணமாக கொளத்தூர் பெரியார் நகர் மருத்துவமனையில் சிகிக்சைக்கு சேர்ந்தார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஜவ்வு கிழிந்திருப்பதால் சிறிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனக் கூறி அறுவை சிகிச்சை செய்துள்ளனர். தொடர்ந்து உடல்நிலை மோசமடையவே சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிசிக்சை அளித்த மருத்துவர்கள் உயிரைக் காப்பாற்ற காலை அகற்ற வேண்டும் எனக் கூறி, காலை அகற்றியுள்ளனர்.
தொடர் சிகிக்சையில் இருந்த அவர், சிகிச்சை பலனளிக்காமல் கடந்த நவம்பர் 15-ம் தேதி உயிரிழந்தார். பெரியார் நகர் மருத்துவமனை மருத்துவர்களின் கவனக்குறைவால் மாணவி உயிரிழந்தது மாநில முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக மருத்துவர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக வெளியான செய்தியின் அடிப்படையில் தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவர் பாஸ்கரன் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.
கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 6 வாரங்களில் விரிவான அறிக்கை அளிக்க வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி மனித உரிமை ஆணையத்தின் புலன் விசாரணை குழுவுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil