ஃபோர்டு மோட்டார் நிறுவனம் தமிழகத்தில் மீண்டும் ஏற்றுமதிக்கான உற்பத்தி ஆலையை அமைக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே இருந்த 12,000 ஊழியர்களுடன் கூடுதலாக 3,000 ஊழியர்களை பணியில் அமர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 17 நாள் அரசுமுறை பயணமாக கடந்த 27-ந் தேதி அமெரிக்கா சுற்றுப்பயணம் சென்றார். அங்கு தொழில் முதலீட்டார்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், தனது பயணத்தை முடித்துக்கொண்டு இன்று சென்னை திரும்புகிறார். சிகாக்கோ விமான நிலையத்தில் இருந்து துபாய் வரும் அவர், அங்கிருந்து சென்னை விமான நிலையம் வந்து இறங்க உள்ளார்.
முதல்வர் ஸ்டாலினின் இந்த சுற்றுப்பயணத்தில், 18 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் மதிப்பு மொத்தம், 7,616 கோடி என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த 18 நிறுவனங்களில் அமெரிக்காவின் முக்கிய காரர் நிறுவனங்களில் ஒன்றான ஃபோர்டு மோட்டார் நிறுவனத்தின் உயர் அதிகரிகளிடம் முதல்வர் ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். சென்னை மறைமலை நகர் செயல்பட்டு வந்த ஃபோர்டு நிறுவனத்தின் கார் தயாரிப்பு நிறுவனம் இங்கு கார் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துகொண்டு இருந்த நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு முதல் தங்கள் தயாரிப்பு பணிகளை நிறுத்திக்கொண்டது.
அதனைத் தொடர்ந்து 2022-ம் ஆண்டு முதல் கார் ஏற்றுமதியையும் நிறுத்திய நிலையில், இது குறித்து முதல்வர் ஸ்டாலின், அந்நிறுவன உயர் அதிகரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் ஃபோர்டு நிறுவனம் சென்னையில் மீண்டும் தனது கார் தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி பணிகளை தொடங்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது, இது தொடர்பாக அந்நிறுவனம் கடிதம் ஒன்றையும் தமிழக அரசிடம் சமர்பித்துள்ளது.
இதன் மூலம் ஃபோர்டு நிறுவனம் தமிழ்நாட்டில் தனது கார் உற்பத்தியை தொடங்குவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இது குறித்து பேசியுள்ள முதல்வர் ஸ்டாலின், ஃபோர்டு உடனான 30 ஆண்டுகால கூட்டணியை மீண்டும் புதுப்பிக்கும் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்தோம். மீண்டும் இந்திய சந்தையில் கவனம் செலுத்துவதற்கு அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு, 2021ல் இந்தியாவில் தனது செயல்பாடுகளை நிறுத்திக்கொண்ட நிலையில், தற்போது மின்சார வாகன விற்பனையுடன் இந்தியாவில் நுழைய முயற்சிகளை தொடங்கியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“