திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு விமான போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானங்களில் வரும் பயணிகள் தங்கம் மற்றும் வெளிநாட்டு ரூபாய்களை கடத்தி வருவதும் இதனை சுங்கத்துறை அதிகாரிகள் தொடர் சோதனை மூலம் பறிமுதல் செய்து வருவதும் அன்றாடம் வழக்கமான நிகழ்வாகவே இருக்கின்றது.
இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்திற்கு கோலாலம்பூரிலிருந்து ஏர் ஏசியா விமானம் வந்தடைந்தது. அப்போது விமான நிலையத்தில் வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளை சோதனை செய்தனர். அதில் ஆண் பயணியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டு அவரது உடமைகளை சோதனை செய்தனர்.
ஒருவர் தனது உடமையில் மறைத்து எடுத்து வந்த வெளிநாட்டு வனவிலங்கு இனங்களை கடத்திவந்தது தெரியவந்தது. பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்து கொண்டுவரப்பட்ட 55 பல்லி மற்றும் ஓணான் வகைகளை பறிமுதல் செய்ததுடன், அதனை கடத்தி வந்தது எப்படி என சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட வனவிலங்கினங்களை வனத்துறையிடம் ஒப்படைக்க உள்ளனர்.
முன்னதாக, திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் தங்கம் கடத்தல் வெளிநாட்டு கரன்சிகள் பறவைகள், பாம்புகள் உயிரினங்கள் கடத்தி வரும் சட்ட விரோதமான செயல்கள் தொடர்ந்து நடைபெற்று கொண்டு வருகிறது. சுங்கத்துறை அதிகாரிகள் கடுமையான சோதனையில் ஈடுபட்டாலும் பயணிகள் "குருவி" என்ற போர்வையில் தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்டு வரும் சம்பவம் வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.
ஆகவே, கடத்தலில் ஈடுபட்டு பிடிபடுபவரகள் மீது வருங்காலத்தில் விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் தொடர் கோரிக்கையாக இருந்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு தங்கம் கடத்தி வந்தவர் கைது செய்யப்பட்ட சம்பவமும் நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“